/indian-express-tamil/media/media_files/x2safDwbRAnFdR0xHxCG.jpg)
மணல் விற்பனையில் முறைகேடு புகார்; ஆற்று மணல் அகழ்வு மற்றும் விற்பனை விவரங்களை அளிக்குமாறு தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம்
தமிழகத்தில் ஏப்ரல் 2021 முதல் ஆற்று மணல் அகழ்வு மற்றும் விற்பனை விவரங்களை அளிக்குமாறு தமிழக அரசுக்கு அமலாக்க இயக்குனரகம் (ED) கடிதம் எழுதியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆற்று மணல் அள்ளுதல் மற்றும் விற்பனையை தனியார்கள் கையகப்படுத்தியதாகவும், சட்டவிரோதமாக அதிக அளவில் மணல் விற்பனை செய்யப்பட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் எழுந்த புகாரின் பேரில் கடந்த செவ்வாய்கிழமை, அமலாக்கத்துறை அதிகாரிகள், தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் சுரங்கங்கள் உட்பட 34 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
“அளவுக்கு அதிகமாக ஆற்று மணல் அள்ளுவது” தொடர்பான முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அதிகாரிகள் மூன்று தொழிலதிபர்கள் எஸ்.ராமச்சந்திரன், கே.ரத்தினம், கரிகாலன் மற்றும் ஆடிட்டர் பி.சண்முகராஜ் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தினர். மேலும், மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) வீரர்களின் ஆதரவுடன், வழக்கு தொடர்பான ஆவணங்களை சேகரிப்பதற்காக நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இரண்டு நாட்களாக நடந்த சோதனையில், மணல் விற்பனை நிலையங்களில் உள்ள சிசிடிவி டேட்டா சேமிப்பு கருவிகள் மற்றும் ஹார்டு டிஸ்க்குகள், மணல் விற்பனைக்கான ஆன்லைன் முன்பதிவைக் கையாளவும், வருமான விவரங்களை உள்ளிடவும் பயன்படுத்தப்படும் கணினிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், டைரிகள், போலி க்யூ.ஆர் குறியீடுகள், போலி ரசீதுகள், நிறுவனங்கள் மற்றும் பினாமி பரிவர்த்தனைகளின் சான்றுகள் உள்ளிட்ட ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகள் மற்றும் பிற ஆதாரங்களில் உள்ள உள்ள சிசிடிவி தரவை அணுகவும், தொடர்ந்து மணல் வாங்குவதற்காக மணல் விற்பனை நிலையங்களுக்கு சென்ற லாரிகளின் விவரங்களை சேகரிக்கவும் அமலாக்கத்துறை முயற்சித்து வருகிறது. ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்ததன் மூலம் கிடைத்த பணமோசடி குறித்தும் அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில், ஆற்று மணல் அகழ்வு, மணல் விற்பனை நிலையங்கள், விற்பனை முறைகள் மற்றும் வணிகத்தில் அதிகாரிகள் மற்றும் தனி நபர்களின் பங்கு தொடர்பான விவரங்களைக் கேட்டு நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. மேலும், ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு ஆற்று மணல் அள்ளுதல் மற்றும் விற்பனையில் தனி நபர்களின் பங்கு குறித்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.