சட்ட விரோத பண பரிமாற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி கைது சரியானது எனவும், அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்தும் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து மேகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், 5 நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க கோரி அமலாக்கத் துறை தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 7-ம் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறையினர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி ஆகஸ்ட் 12ம் தேதி (இன்று) வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை வசம் ஒப்படைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் புழல் சிறையிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சாஸ்திரி பவனுக்கு அழைத்து வரப்பட்டார். அங்குள்ள 3-வது மாடியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
5 நாட்களில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 300க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், நீதிமன்றகாவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் மருத்துவ பரிசோதனை முடிந்த பின் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது செந்தில்பாலாஜியிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் நீதிமன்ற காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.
அமலாக்கத் துறையினரின் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 25ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை புழல் சிறைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
முன்னதாக, நீதிபதி அல்லி அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், அவர் அமலாக்கத் துறையினரால் எவ்வாறு நடத்தப்பட்டார் மற்றும் அவர்கள் மீது ஏதேனும் புகார் உள்ளதா? என்று கேட்டார். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியி அமலாக்கத் துறையினர் தன்னை நன்றாக நடத்தியதாகவும், அவர்கள் மீது தனக்கு எந்த புகாரும் இல்லை என்றும் பதிலளித்தார். இதைப் பதிவு செய்த நீதிபதி, அவரது நீதிமன்றக் காவலை நீட்டித்தார்.
இதனிடையே, செந்தில்பாலாஜிக்கு ஜாமின் கோரி வரும் 16ம் தேதிக்குப் பின் மனு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil