/indian-express-tamil/media/media_files/2025/07/18/eps-trichy-siva-stalin-2025-07-18-04-06-46.jpg)
“கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெரும் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
காமராஜர் குறித்து தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவாவின் பேச்சு அரசியல் வட்டாரத்திலும், பொதுத் தளத்திலும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காமராஜரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா எம்.பி., “காமராஜர் ஏசி அறை இல்லாமல் தூங்கமாட்டார்” என்றும், “அவர் இறப்பதற்கு முன்பு கருணாநிதியின் கையைப் பிடித்துக்கொண்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்” என்றும் கூறியதாகப் பேசினார்.
திருச்சி சிவாவின் இந்தப் பேச்சு, அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது. தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு திருச்சி சிவா அறிக்கை வெளியிட்டு விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்" என்று வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்தார்.
எடப்பாடி பழனிசாமியின் கண்டனம்:
இந்தச் சூழலில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 'எக்ஸ்' தளப் பதிவில், திருச்சி சிவாவின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெரும் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) July 17, 2025
கர்மவீரர் காமராஜர் மறையும் தருவாயிலான நிகழ்வுகள் வரலாற்றுக் குறிப்பாக உள்ள போதே, காமராஜர்…
மேலும், "கர்மவீரர் காமராஜர் மறையும் தருவாயிலான நிகழ்வுகள் வரலாற்றுக் குறிப்பாக உள்ள போதே, காமராஜர் கருணாநிதியின் கையைப் பிடித்துப் புகழ்ந்தார் என்பது எவ்வளவு பெரிய பச்சைப்பொய்? தி.மு.க-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா?" என்று சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
"பெருந்தலைவர் காமராஜர் பற்றி ஸ்டாலினும், தி.மு.க-வும் பேசுவதெல்லாம் நகைமுரண். பெருந்தலைவர் குறித்து சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்? உங்கள் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர், தி.மு.க-வின் துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா தானே?” என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
சமூக வலைத்தளங்களில் காமராஜர் குறித்த அவதூறுகளை தி.மு.க-வினர் பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டிய பழனிசாமி, “காமராஜர் குறித்த கருணாநிதியின் பழைய முரசொலி சித்திரங்களை எல்லாம் யாரும் மறந்துவிடவில்லை. அப்படி கர்மவீரர் காமராஜர் மீது பன்னெடுங்காலமாக கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மத்தை, இப்படி ஒரு சர்ச்சை உருவாக்கி, அதன் மூலம் காமராஜர் புகழை மழுங்கடிக்கத் துடிக்கும் அற்ப அரசியலை செய்வது தி.மு.க தானே?” என்று கேட்டுள்ளார்.
மேலும், “இவரே வெடிகுண்டு வைப்பாராம்.. இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்! நடிக்காதீங்க மு.க. ஸ்டாலின் அவர்களே!” என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, “அவதூறான பேச்சை திரித்துப் பேசும் போதே தெரிகிறது, உங்களுடைய நோக்கம் என்னவென்று! ஒன்றைத் தெளிவாக சொல்கிறேன்- உங்களாலோ, உங்கள் அடிப்பொடிகளாலோ, ஒருபோதும் மக்களுக்காக உழைத்த பெருந்தலைவர் காமராஜரின் புகழைத் துளியும் குறைத்துவிட முடியாது, வாழ்க கர்மவீரரின் புகழ்” என பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.