அதிமுக ஆட்சியில் எண்ணற்ற பிரச்னைகளை உருவாக்கினார்கள்.எதற்கெடுத்தாலும் போராட்டம்; ஆயிரக்கணக்கான போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்து அத்தனையும் சமாளித்தோம்.ஆனால் இன்றைய முதல்வரால் எதையும் சமாளிக்க முடியவில்லை என்று அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.
சேலம், ஆட்டையாம்பட்டியில் அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது: அதிமுகவின் பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்வு செய்து நான் இடைக்கால பொதுச்செயலாளராக வந்துள்ளேன். ஸ்டாலின், தந்தை மறைவுக்கு பிறகு தலைவராகியுள்ளார். எங்களைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை.
அதிமுக ஆட்சியில் எண்ணற்ற பிரச்னைகளை உருவாக்கினார்கள். எதற்கெடுத்தாலும் போராட்டம்; ஆயிரக்கணக்கான போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்து அத்தனையும் சமாளித்தோம்.
ஆனால், இன்றைய முதலமைச்சரால் எதையும் சமாளிக்க முடியவில்லை. மடியில் கனமில்லை, அதனால், வழியில் பயமில்லை. எதற்கும் அதிமுக அஞ்சாது. உப்பை தின்றவர்கள் தண்னீரை குடித்தே ஆக வேண்டும் யாரும் தப்பிக்கமுடியாது.
அ.தி.மு.க.வை வஞ்சிக்கவோ, துன்புறுத்தவோ, நினைத்தால் மீண்டும் திரும்பி சம்பந்தப்பட்டவர்களுக்கு வரும். எதுவுமே தெரியாத பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், போட்டோ ஷூட் மட்டுமே நடத்துகிறார்.
குழுக்கள் மட்டுமே போடப்பட்டுள்ளன. திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. திட்டங்களை நிறைவேற்ற 38 குழுக்கள் போட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறிகள் நடைபெறுகிறது.
2024 நாடாளுமன்ற தேர்தலின் போது கூட தமிழக சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்புள்ளது, 44 அமாவாசை காத்திருக்க தேவையில்லை. என்னை தற்காலிக தலைவர் என்கிறார். ஆனால், உடல்நலம் குன்றிய போது ஸ்டாலினை நம்பி திமுகவை கருணாநிதி ஒப்படைக்கவில்லை, செயல் தலைவராகத்தான் வைத்திருந்தார்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.