/indian-express-tamil/media/media_files/2025/03/23/rLKnT7naOMeTs4SBsmGE.jpg)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய 3 மாநில முதலமைச்சர்கள், பல்வேறு மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டுக்குழு கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை மறைக்கவே பிற மாநில தலைவர்களை அழைத்து தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதலமைச்சர் பேசியுள்ளார் என்றும் தமிழகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பவே கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் என்று விமர்சித்துள்ளார்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை மறைக்கவே பிற மாநில தலைவர்களை அழைத்து தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதலமைச்சர் பேசியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தி.மு.க போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. தமிழகத்தில் இருக்கும் முக்கிய பிரச்னைகளை திசை திருப்பவே கூட்டு நடவடிக்கை குழு” என்று கூறினார்.
சசிகலா, ஓ.பி.எஸ் ஆகியோரை அ.தி.மு.க-வில் சேர்க்க வேண்டும் என்று பா.ஜ.க உங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக சொல்கிறார்களே? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி நீங்களாகவே ஒரு கற்பனை பண்ணிகொள்கிறீர்கள், கண்ணு, காது, மூக்கு வைத்து, ஏதாவது தினந்தோறும் அ.தி.மு.க பற்றி செய்தி வந்துகொண்டிருக்க வேண்டும். அதற்கு மட்டும் இந்த ஊடகமும் பத்திரிகையும் சளைத்தவர்கள் அல்ல. யாருங்க, நீங்களா எழுதிக்கொள்கிறீர்கள், நீங்களா ஒரு கற்பனை பண்ணிக்கொள்கிறீர்கள், நீங்களா ஒரு கேள்வி கேட்கிறீர்கள். 100 சதவீதம் அப்படி அல்ல. திருப்பித்திருப்பி நான் உங்களுக்கு சொல்லியாகி விட்டது.
அ.தி.மு.க மிகச் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிற இயக்கம். நீங்கள் சொன்ன நபர்களை யாரும் இந்த இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவதாக இன்றுவரைக்கும் திட்டம் எதுவும் இல்லை.” என்று கூறினார்.
எதிர்காலத்தில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “எதுவுமே கிடையாது. அ.தி.மு.க சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது, எதுக்கு அதெல்லாம் தேவை” என்றார்.
ராஜ்ய சபா சீட் பா.ம.க கேட்பதாக ஒரு தகவல் பேசப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “ராஜ்ய சபாவே அறிவிக்கவில்லை, அதற்குள்ளேயே அவர்கள் கேட்டார்கள், இவர்கள் கேட்டார்கள் என்று நீங்களாக ஒரு கற்பனையை உருவாக்கிக்கொண்டு என்னிடத்தில் கேட்டு ஒரு பரபரப்பான செய்தி உங்கள் ஊடகத்தில் வர வேண்டும் என கேட்கிறீர்கள். அதற்கு நான் தான் கிடைச்சனா பா? இது தேவையா, அதெல்லாம் வரும்போது நாங்கள் சொல்கிறோம். ராஜ்ய சபா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கிற அறிவிப்பு வருகிறபோது அதைப் பற்றி நாங்கள் சொல்வோம்.” என்று கூறினார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.மு.க கூட்டணியில் இருந்து விலக உள்ளதாகவும் அ.தி.மு.க கூட்டணியில் சேர உள்ளதாகவும் பேசப்படுகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அப்படி எதுவுமே இல்லை, இது கற்பனையான கேள்வி. அப்படியெல்லாம் கிடையாது. அவரும் அணுகவில்லை, நாங்களும் அவரைக் கேட்கவில்லை.” என்று கூறினார்.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் மாற்றுக் கட்சிகள் உங்கள் கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகுதான், ஒரு நிலையாகத் தெரியும். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரைக்கும்
நான் அடிக்கடி சொல்கிறேன். கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது நிலையானது. கூட்டணி என்பது எதிரியை வீழ்த்துவதற்காக அமைத்து, வாக்குகள் சிதறாமல் பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக கூட்டணி அமைக்கிறோம். இவர்களைப் போல நிரந்தரமான கூட்டணி கிடையாது. தி.மு.க கூட்டணி நிலையாக இருக்கும் என்றால் 7 கட்சி ஏன் இருக்க வேண்டும். ஒரே கட்சியாக இருக்கலாமே. மற்றவர்கள் எல்லாம் கட்சி என்று ஏன் இருக்க வேண்டும். மக்களின் பிரச்னைகளை எடுத்து வைப்பதற்கு அ.தி.மு.க எப்போதும் சளைத்ததில்லை. அதே போல, ஒவ்வொரு கட்சியும் மக்களுடைய பிரச்னைகளைப் பேசுகிறார்கள், ஆனால், தி.மு.க தலைமையில் அங்கம் வகிக்கிற கட்சிகள் த்மிழ்நாட்டுப் பிரச்னைகளை எதையுமே சொல்வதில்லை. எவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது, சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு இருக்கிறது, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை ஏதாவது பேசுகிறார்களா, விலைவாசி உயர்வு பற்றி பேசுகிறார்களா, பல்வேறு தரப்பில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள், அந்த போராட்டத்தைப் பற்றியெல்லாம் கூட கம்யூனிஸ்ட் கட்சிகள் நினைக்கவில்லை.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.