/indian-express-tamil/media/media_files/2025/09/16/eps-amit-shah-meet-2-2025-09-16-21-42-14.jpg)
சந்திப்பு முடிந்ததும் அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் தனியாக கிளம்பி சென்றனர். அதற்கு பிறகு, 40 நிமிடம் சந்திப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி மட்டும் தனியாக கிளம்பி சென்றார் என ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. Photograph: (File Photo)
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அமித்ஷாவை சந்திப்பதற்கு அவருடன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை, சி.வி. சண்முகம், இன்பதுரை, தனபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் உடன் சென்றனர்.
அ.தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் செப்டம்பர் 5-ம் தேதி செய்தியாளர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அ.தி.மு.க-வை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபடுவேன்” என்று கூறினார். மேலும், இதற்கான பதிலுக்காக செங்கோட்டையன், 10 நாட்கள் அவகாசம் அளிப்பதாக கூறினார்.
செங்கோட்டையன் கருத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோர் வரவேற்றனர்.
ஆனால், செங்கோட்டையன் அவகாசம் அளித்து ஒரு நாள் கழித்து, அவர் கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஹரித்துவார் செல்வதாகக் கூறிவிட்டு டெல்லி சென்ற செங்கோட்டையன், டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து, புதிதாய் தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார் என அ.தி.மு.க தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (16.09.2025) டெல்லி சென்றார். முதலில், குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடனிருந்தனர்.
பின்னர், எடப்பாடி பழனிசாமி இரவு 8 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். எடப்பாடி பழனிசாமி, சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.
அமித்ஷாவை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமியுடன், அ.தி.மு.க மூத்த தலைவர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, தம்பிதுரை, சி.வி. சண்முகம், இன்பதுரை, தனபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் உடன் சென்றனர்.
இந்த சந்திப்பின்போது, எடப்பாடி பழனிசாமி, “என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிருப்தி தலைவர்களைச் சந்திக்க வேண்டாம். அமலாக்கத்துறை, சி.பி.ஐ வழக்குகள் உள்ள தி.மு.க தலைவர்கள், அமைச்சர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என்.டி.ஏ. கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்திப்பு முடிந்ததும் அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் தனியாக கிளம்பி சென்றனர். அதற்கு பிறகு, 40 நிமிடம் சந்திப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி மட்டும் தனியாக கிளம்பி சென்றார் என ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.