முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரபூர்வ அரசு இல்லம், சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது. இங்கு குடும்பத்தினருடன் எடப்பாடி பழனிசாமி வசித்து வருகிறார். இன்று (மே 5-ம் தேதி) இரவு சென்னையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துவிட்டு அந்த ஆசாமி போனை வைத்தான். இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் முதல்வரின் இல்லத்தில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் காணப்படவில்லை.
சற்று நேரத்தில் அதே குரல் மூலமாக சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது. அங்கும் பாதுகாப்புக்கு போலீஸார் அனுப்பப்பட்டனர்.
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்த எண்ணை கண்டறிந்து போலீஸ் நடத்திய விசாரணையில் மிரட்டல் விடுத்த நபரின் பெயர் பிரதீப் என்றும், கடலூரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்திருக்கிறது. போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.