சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எடப்பாடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பேசிய அவர் விஜய் மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "அ.தி.மு.க ஆட்சியில் 36 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.அதிமுக ஆட்சியில் அனைத்து போராட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு உள்ளது, அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்சியை பிடிக்க ஆசை இருக்கலாம். ஆனால் மக்கள் தான் முடிவெடுப்பார்கள். தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.
திரையுலகில் விஜய் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். அவருக்கென ரசிகர் பட்டாளம் உள்ளது. அவரும் பொது சேவை செய்ய வேண்டுமென்று விரும்புகிறார். கட்சி தொடங்கியுள்ளார். த.வெ.க மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்.
விஜய் பொதுக்கூட்டத்திற்கு மட்டுமல்ல, அ.தி.மு.க போராட்டங்களுக்கும் தி.மு.க அரசு அனுமதி மறுத்துள்ளது. தி.மு.க.வில் நிறைய கூட்டணி கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தி.மு.க.வை பிடித்து கொண்டிருக்கிறார்கள். இதில் மேலே இருக்கிற கூட்டணி கட்சி தலைவர் கையை விட்டால் கடைசியில் இருக்கிற தி.மு.க.வின் கதி என்னாவது? அப்படித்தான் தி.மு.க.வின் நிலை இன்றைக்கு நிலவுகிறது.கூட்டணி கட்சியினர் கைவிட்டால் தி.மு.க. வீழ்ந்து போய் விடும். ஆனால் அ.தி.மு.க. அப்படி இல்லை. வெற்றி, தோல்வி மாறி மாறி சந்தித்த கட்சி அ.தி.மு.க. எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர வெற்றி கிடையாது. எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர தோல்வி கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக வெற்றி, தோல்வி அமைவது அமைவது இயற்கை. அதை நாம் தமிழகத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்" இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை கிராமத்தில் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“