தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், பொள்ளாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று முதலமைசர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் பதிலளித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்காக பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (29.04.2025) காவல்துறை மாணியக் கோரிக்கையின் போது நடைபெற்ற விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது என்றும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது குற்றம் சாட்டினார்.
மேலும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவேங்கடம் என்கவுன்ட்டர் போலி என்கவுன்ட்டரா என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதாரமின்றி பொதுவாக குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறார். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சம்பவமே சாட்சி. துயரங்கள் கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சாட்சி.
தமிழ்நாட்டு மக்களைக் கேட்டால் அ.தி.மு.க ஆட்சியில் பட்ட வேதனைகளை கண்ணீருடன் புலம்புவார்கள். சட்டம் ஒழுங்கு குறித்து பேசுவதற்கு அதிமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை.
அ.தி.மு.க ஆட்சியில் குட்கா விவகாரம் தலைவிரித்து ஆடியதை யாரும் மறக்கவில்லை. இளைஞர்களை சீரழிக்கும் போதை பொருட்களை ஒழிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
ஊழல் வழக்குகளில் இருந்து தற்காத்துக் கொள்ள தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்தவர்கள் அ.தி.மு.க-வினர். கடந்த 12 ஆண்டுகளில் 2024-ம் ஆண்டில்தான் கொலைகள் குறைவாக நடந்துள்ளது. தி.மு.க ஆட்சியில் 15,899 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விரைவாக குற்றப்பத்திரிகை பதிவு செய்யும் அரசாக தி.மு.க அரசு உள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் 55,925 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தி.மு.க ஆட்சியில் 91,501 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா விற்ற 17,537 கடைகள் மூடப்பட்டுள்ளன.
குறிப்பாக, தமிழ்நாட்டில் எந்த காரணத்தை கொண்டும், மதவாதம் உள்ளே நுழைய முடியாது! முடியாது! முடியாது! பா.ஜ.க ஆளுகிற மாநிலங்களில்தான் அதுபோன்ற நடவடிக்கைகள் மேலோங்கி இருக்கின்றன. ஆனால், அதுசார்பில் பிரதமர் அப்பகுதிகளை ஒருமுறைகூட சென்று பார்க்கவில்லை என்பதை மக்கள் அறிவார்கள்.” என்று கூறினார்.
பொள்ளாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சம்பவமே சாட்சி என்று முந்தைய அ.தி.மு.க ஆட்சியை சட்டப்பேரவையில் விமர்சித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்காக பதிலடி கொடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி; சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி; பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி; போதைப் பொருள் கடத்தலுக்கு தி.மு.க அயலக அணியே சாட்சி; போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் தி.மு.க இளைஞரணி கூட்டமே சாட்சி; ஸ்டாலின் மாடல் சமூக (அ) நீதிக்கு வேங்கைவயலே சாட்சி” என அடுக்கடுக்காக பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி; சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி; பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி; போதைப் பொருள் கடத்தலுக்கு தி.மு.க அயலக அணியே சாட்சி; போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் தி.மு.க இளைஞரணி கூட்டமே சாட்சி; ஸ்டாலின் மாடல் சமூக (அ) நீதிக்கு வேங்கைவயலே சாட்சி; ஏற்கெனவே ஆபரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே தோல்வி. இதில் இன்று வெர்ஷன் 2.0 லோடிங்காம்!
அ.தி.மு.க ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமினில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு பொம்மை முதலமைச்சரே சாட்சி. 2026-ல் ஒரே வெர்ஷன்தான் - அது தமிழ்நாடு அ.தி.மு.க வெர்ஷன்தான்!
மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு பைபை ஸ்டாலின் என்று சொல்லும்போது தாங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி.” என்று கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.