/indian-express-tamil/media/media_files/2025/03/25/B4jAaU0WrgGCqD1R1e3d.jpg)
இருமொழிக் கொள்கை தொடர வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வலியுறுத்தினேன் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட தொடங்கி விட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசியலில் திடீர் திருப்பமாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமித் ஷாவை நேற்று (மார்ச் 25) இரவு சந்தித்து பேசினார். எடப்பாடி பழனிசாமியுடன் அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளான தம்பிதுரை, கே.பி முனுசாமி, எஸ்.பி வேலுமணி, தங்கமணி, சி.வி சண்முகம் உள்ளிட்டோரும் அமித் ஷாவை சந்தித்து பேசினர்.
இதனையடுத்து மீண்டும் அ.தி.மு.க- பா.ஜ.க இடையே கூட்டணி ஏற்படும் என்ற பேச்சுக்கள் நிலவியது. மேலும் சந்திப்புக்குப் பின்னர் அமித் ஷா, 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இது கூட்டணி குறித்த பேச்சுக்களை அதிகபடுத்தியது.
இந்த நிலையில், டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்தே அமித் ஷாவிடம் விவாதித்தோம் என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விவாதித்தோம். தமிழக திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தினோம். கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினேன்.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டுமென அமித் ஷாவிடம் வலியுறுத்தினேன். மும்மொழிக் கொள்கையை திணிக்க கூடாது. தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது. அப்படி மேற்கொண்டால் நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேகதாது, முல்லைப்பெரியாறு அணை விவகாரங்களிலும் நடவடிக்கை எடுக்க கோரினோம். முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நதியிலிருந்து உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்ய வலியுறுத்தினேன். காவிரி – கோதாவரி இணைப்பு திட்டத்தை விரைந்த செயல்படுத்த வலியுறுத்தினேன்.
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலை முழுமையாக விசாரிக்க கோரியும் வலியுறுத்தினோம். தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டது. தமிழகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு, பாலியல் வன்கொடுமைகள் பிரச்சினைகள் குறித்தும் அமித் ஷாவிடம் தெரிவித்தோம்.
அ.தி.மு.க அலுவலகத்தை பார்வையிடவே வந்தேன். நேரம் கிடைத்தால் அவரை பார்க்கலாம் என்று இருந்தோம். அதன்படி, நேரம் ஒதுக்கப்பட்டதும் 45 நிமிடம் ஒவ்வொரு பிரச்சினைகளையும் விரிவாக எடுத்துரைத்து அவரிடம் பேசினோம்.
கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை, முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினையை பேசுவதற்கு தான் அமித் ஷாவை சந்தித்தேன். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களது கொள்கை எப்போதும் நிலையாக இருக்கும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படுவது, தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறும். தேர்தல் நேரத்தில் என்ன சூழ்நிலை இருக்குதோ, அதை பொறுத்தே கூட்டணி மாறும். கூட்டணி இருக்கு இல்லை என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மக்கள் பிரச்சினைகளை பேசி தீர்வு காணும் கட்சி அ.தி.மு.க. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.