/tamil-ie/media/media_files/uploads/2021/10/eps.jpeg)
சேலம் மாவட்டம், ஓமலூர், தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி (45). இவர் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராகக் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவர், பல நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், கடலூர் மாவட்டம், நெய்வேலி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர், அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி மணி ரூ.17 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
புகாரின்படி, அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளராக வேலை வாங்கிக் கொடுக்க ரூபாய் 17 லட்சம் கேட்டுள்ளனர். இதில், 10 லட்சம் ரூபாயை மணியின் கூட்டாளி செல்வகுமாருக்கு ஆன்லைனில் அனுப்பியுள்ளார். மீதமுள்ள 7 லட்சம் ரூபாயை நேரடியாக அவரை சந்தித்து கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளர் மணி மற்றும் செல்வகுமார் பணம் வாங்கி மோசடி செய்ததாக 120 (1), பி, 420 ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மணியைப் போலீசார் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். இதே போல, பல நபர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு மணி ஏமாற்றியுள்ளதாகவும், அது தொடர்பாகவும் விசாரணை நடைபெறுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.