திமுக ஆட்சியில் ஒட்டுமொத்த சினிமா துறையும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக 52வது ஆண்டு தொடக்க தொடக்க விழாவை முன்னிட்டு ட்விட்டர் ஸ்பேசில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், ’தென் மாவட்டங்களில் நாம் அதிமுகவைப் பலப்படுத்தியே தீர வேண்டும். இந்தப் பணிகளில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஈடுபட வேண்டும். அவர்களால் தான் அதிமுகவைப் பலப்படுத்த முடியும்.
தமிழ்நாட்டில் இப்போது நிலைமை எப்படி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இதை நாம் பொது மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
திமுக ஆட்சியில் ஒட்டுமொத்த சினிமா துறையும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.. சாதகமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரப்படுகிறது. பிறருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டிலேயே ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறது. அப்படியிருக்கும் போது முதல்வர் ஸ்டாலின் "இந்தியா" கூட்டணியை அமைத்து நாட்டை காப்பாற்றப் போகிறேன் எனக் கிளம்பிவிட்டார்.
கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்.. திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான வேலையை மட்டும் அதிமுக தொண்டர்களாகிய நீங்கள் பாருங்கள்..
அதிமுக கூட்டணியைப் பார்த்து உங்களது பிரதமர் வேட்பாளர் யார் என்று ஸ்டாலின் கேட்கிறார்.. நான் அவரிடம் ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன். இந்த "இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று உங்களால் சொல்ல முடியுமா’, என்று அவர் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“