Advertisment

'கருணாநிதியின் பேரன் என்பதை தவிர உதயநிதிக்கு என்ன அடையாளம் இருக்கிறது?: இ.பி.எஸ் கேள்வி

கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்பதை தவிர்த்து, உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன அடையாளம் உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
EPS and Udhay

துணை முதலமைச்சராக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு கருணாநிதியின் பேரன் மற்றும் ஸ்டாலினின் மகன் என்பதை தவிர என்ன அடையாளம் இருக்கிறது என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

திமுகவில் அனுபவம் வாய்ந்த அமைச்சர்களுக்கு பதிலாக உதயநிதி ஸ்டாலின் மட்டுமே வேலை செய்கிறார் என்றும், அனுபவம் பெற்ற அமைச்சர்களின் அறிவுரைகளை கேட்காமல் உதயநிதியை முன்னிலைப்படுத்தும் நோக்கில் திமுக பணியாற்றுவதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக, 2016-ஆம் ஆண்டு அப்போதைய முதலைச்சர் ஜெயலலிதா மறைந்த போது அதிமுகவில் இருந்த மூத்த தலைவர்களைக் கடந்து எடப்பாடி பழனிசாமி எவ்வாறு முதலமைச்சர் பதவிக்கு வந்தார் என்ற டிராமாவை தமிழக மக்கள் தொலைக்காட்சிகளில் பார்த்தனர் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் பதிலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்ட நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பம் மீண்டும் மன்னராட்சியை புகுத்துவதாக கூறியுள்ளார்.

குறிப்பாக, திமுகவில் வாரிசு அரசியல் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டிய அவர், கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்பதை தவிர உதயநிதிக்கு என்ன அடையாளம் இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டாலினின் மகன் என்பதால் ஒரே ஒரு முறை சட்டமன்ற உறுப்பினரானவுடன் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாகவும், தற்போது துணை முதலமைச்சர் பதவி வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், திமுகவில் வேறு யாருமே இல்லை என்பது போல் அவசரமாக அக்கட்சி செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் 50 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்து படிப்படியாக பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு வந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நிலை சரியில்லை என பரவலாக பேசப்படுவதாகக் கூறிய எடப்பாடி, அதன் காரணமாகவே உதயநிதிக்கு அவசரமாக துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். மிசாவில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்தவர்கள் வெளியே இருக்கும் சூழலில், கருணாநிதியின் குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக உதயநிதி ஜெட் வேகத்தில் பதவியேற்றுள்ளதாக விமர்சித்துள்ளார்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Udhayanidhi Stalin Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment