2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றிபெற்று விடலாம் என்ற தி.மு.க.வினரின் கனவு ஒரு போதும் பலிக்காது என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில், அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, "நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.க மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. கூட்டணி சரியாக அமையவில்லை என கூறினார்கள். கூட்டணி வரும், போகும். ஆனால் கொள்கை நிலையானது. தமிழகத்தில் தனித்து நின்று ஆட்சியை அமைத்த ஒரே கட்சி அ.தி.மு.க தான் 2021ஆம் ஆண்டு 1.98 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தி.மு.க ஆட்சியில் அமர்ந்தது.
500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி தி.மு.க தான். தமிழகத்தில் நிதி நிலைமை படு பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இன்று விலைவாசி உயர்ந்துவிட்டது. தி.மு.க ஆட்சியில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. தி.மு.க ஆட்சியில் 50-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரசு குழு அரசாகவே உள்ளது.
டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 3,600 கோடி வசூல் கிடைக்கிறது.
சட்டப்பேரவை நாள்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு காரணம் பயம்தான். அ.தி.மு.க.வை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்து விட்டது. சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை என்பார்கள். ஆனால் நான் பேசும் போது கட் செய்கிறார்கள். சட்டப்பேரவையில் நான் பேசியதை ஒளிபரப்பி இருந்தால் தி.மு.க அரசே இருந்திருக்காது.
200 தொகுதிகளில் வெற்றி என தி.மு.க பகல் கனவு காண்கிறது. அ.தி.மு.க.வின் எழுச்சி, 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றியாக இருக்கும். 2026 தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியில் அமரும்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“