பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் நிலவும் சில விவகாரங்கள் குறித்து பேசவுள்ளதாக தகவல்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க கடந்த மாதம் 30-ம் தேதி முதல்வர் பழனிசாமி அனுமதி கோரியிருந்தார். ஆனால் அவருக்கு நேரம் ஒதுக்கப்படாமல் இருந்தது. அதிமுக மீது பாஜக அதிருப்தியில் இருப்பதாகவும் அதனால்தான் அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து பிரதமரை சந்திக்க நாளை முதல்வர் பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் :
இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் பழனிசாமி இன்று மாலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். நாளை பிரதமரை சந்திக்கும் அவர் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது, ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசுவார் என தெரிகிறது.
மேலும், அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி குறித்தும் தமிழக அரசியல் சூழல் குறித்தும் விவாதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.