கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விவசாய பிரதிநிதிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இதன்பின் உரையாற்றி எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;
அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.12,000 கோடிக்கு மேல் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும் விவசாயிகளுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து வந்தோம். கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்க திட்டம். அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது. தொகுதிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைவு கூட வேளாண் அமைச்சருக்கு இல்லை என்றார்.
மேலும், கூட்டணி ஆட்சி குறித்து அவர் பேசியதாவது; தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை. எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார். எங்கள் கூட்டணியைப் பொருத்தவரை நான் சொல்வதே இறுதியானது. இந்த கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும். அதிமுக ஆட்சி அமைக்கும். அதில் இபிஎஸ் முதலமைச்சர். இதில் உங்களுக்கு என்ன சந்தேகம் இருக்கிறது. இந்தக் கூட்டணியில் யாரும் விரிசல் ஏற்படுத்த முடியாது. அதிமுக கூட்டணி பிரமாண்ட வெற்றி அடையும் தனிபெரும் ஆட்சி அமைக்கும் என்றார். ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, “காலம் கடந்துபோய்விட்டது” என்று பதில் அளித்தார்.
பின்னர், பாஜக முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் திமுக முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் மாறன் இணைந்து இருக்கும் படங்களை வெளியிட்டு பேசியபோது, பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் நல்ல கட்சி, ஆனால், அதிமுக கூட்டணி வைத்தால் அது மதவாத கட்சி ஆகிவிடுமா? எனப்பேசி கைத்தட்டலை பெற்றார்.
அமித் ஷா பேசியது என்ன? - கடந்த ஏப்ரல் 11-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா, “பாஜக தலைவர்களும், அதிமுக தலைவர்களும் இணைந்து கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் இணைந்து சந்திக்க இருக்கிறோம். வரும் தேர்தலின்போது தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலும் போட்டியிட இருக்கிறோம்.
வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பாஜகவும், அதிமுகவும் இணைந்துதான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியமைக்கப் போகிறோம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில்தான் கூட்டணி இருக்கும்.
அமைச்சரவை குறித்து வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்யப்படும். எங்களுடன் கூட்டணியில் இணைந்ததற்கு அதிமுக எந்தவித கோரிக்கையும், நிபந்தனையும் விதிக்கவில்லை. அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜகவின் தலையீடு ஒருபோதும் இருக்காது. கூட்டணியில் இணைவதன் மூலம் இருதரப்புக்குமே பலனிருக்கிறது. யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதும், வெற்றி பெற்ற பிறகு ஆட்சியில் எத்தகைய பங்கு என்பதும் பின்னர்தான் பேசப்படும்” என்று அமித்ஷா பேசியிருந்தார்.
சர்ச்சைகளும் விளக்கமும்: அமித் ஷாவின் பேச்சை வைத்து இன்றுவரை அதிமுக பாஜகவிடம் தன்னை அடகு வைத்துவிட்டது, பாஜக தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இது குறித்து எடப்பாடி பழனிசாமியும் பலமுறை விளக்கம் கொடுத்துவிட்ட நிலையில், இன்றும் அதுபற்றி கேள்வி எழுப்பப்பட அவர் மீண்டும் விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்