அ.தி.மு.க கட்சி பணிகளை விரைவுபடுத்துவதற்காக புதிதாக கள ஆய்வுக் குழுவை நியமனம் செய்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த கள ஆய்வுக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், டி ஜெயக்குமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
அ.தி.மு.க-வின் கள ஆய்வுக் குழு, “அ.தி.மு.க புதிய உறுப்பினர் அட்டைகள் அனைவருக்கும் கிடைத்ததா என்பதை ஆய்வு செய்து கட்சி தலைமைக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.” என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அ.தி.மு.க கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும் புதுப்பிக்கப்பட்ட அ.தி.மு.க உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கழக உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்தும் அதன் விபரங்களை அறிக்கையாக அளிப்பதற்காக அ.தி.மு.க சார்பில், கள ஆய்வு கிழ்கண்டவாறு அமைக்கப்படுகிற்து.
கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, பா. வளர்மதி, வரகூர் அருணாசலம் ஆகிய மேற்கண்ட குழுவினர் அ.தி.மு.க அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து அதன் விபரங்களை 07.12.2024-க்குள் அறிக்கையாக சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களுக்கு வருகை தரும் கள ஆய்வுக் குழுவினர் அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்வதற்கான குழு ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். அ.தி.மு.க-வின் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியை முழு கவனத்துடன் செய்திடுமாறு அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் அனைவரையும் அன்போடு கேடுக்கொள்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“