டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று டெல்லி சென்றார். இன்று (ஜூன் 17) காலை 10 முதல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பிற்பகலில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
‘தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களுக்கு தேவையான நிதி வழங்க பிரதமரிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். 100 நாள் வேலை திட்டம், குடி மராமத்து திட்டம் உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் நிதி கேட்டிருக்கிறேன்.
ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் வளர்ச்சியை நோக்கி செல்லும் மாவட்டங்கள் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கோரிக்கை வைத்தேன். விருதுநகர் மாவட்டத்தில் ஒரு பல் மருத்துவக் கல்லூரி அமைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
மதுரை காந்தி மியூசியத்திற்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மேம்படுத்த கோரப்பட்டிருக்கிறது. 1971-ம் ஆண்டு மக்கள் தொகை விகிதப்படி தமிழ்நாட்டுக்கு நிதி பங்கீடு செய்யவேண்டும் என கேட்டோம். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தை ரூ 500 கோடி ஒதுக்கி, மத்திய பல்கலைக்கழகமாக உயர்த்த வேண்டுகோள் வைத்தோம்.
அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தோம். உடனடியாக அதை செயல்படுத்தவும் கோரிக்கை வைத்திருக்கிறோம்.’ என்றார் எடப்பாடி பழனிசாமி.
‘பிரதமரை தனியாக சந்தித்தீர்களா?’ எனக் கேட்டபோது, ‘தனியாக சந்திக்க வில்லை. கூட்டம் முடிந்து வரும்போது தமிழ்நாட்டின் நிலைமைகளை எடுத்துச் சொல்லி, கோரிக்கைகளை வைத்துள்ளோம்.’ என்றார். தொடர்ந்து, ‘தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கால் இழந்தவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்டெரிலைட் ஆலை இயங்க தடை விதிக்கப்பட்டுவிட்டது.’ என்றார் முதல்வர்.