அ.தி.மு.க பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோயம்புத்தூரில் இன்று பரப்புரை செய்தார். அப்போது, “ஆட்சி அதிகாரத்துக்கு ஆசைப் பட்டிருந்தால் பா.ஜனதா கூட்டணியில் தொடர்ந்திருப்போம்” என்றார்.
இது குறித்து அவர் கூறுகையில், “இந்தியா கூட்டணி என்று சொல்கிறோம்; நீங்கள் என்னவென்று சொல்லப் போகிறீர்கள்? என மு.க ஸ்டாலின் கேட்டுள்ளார்.
மு.க. ஸ்டாலின் அவர்களே, அ.தி.மு.க எப்போதுமே ஆட்சி அதிகாரத்துக்கு ஆசைப் பட்டது கிடையாது. என்னுடைய தமிழ்நாட்டு மக்கள், என் மக்கள்.. அவர்களின் கோரிக்கை மற்றும உரிமைகளை கேட்க வேண்டும்.
தமிழ்நாடு மக்களுக்கு எது தேவையோ அதை மத்திய அரசிடம் பேசி பெற வேண்டும். இதுதான் எங்களின் நிலைப்பாடு. உங்களைப் போல் மகனை மேலே கொண்டுவர வேண்டும் என நினைக்கிறீர்கள்.
நீங்கள் செய்த ஊழல்கள் மறைக்கப்பட வேண்டும் என மு.க. ஸ்டாலின் நினைக்கிறார். அதனால்தான் இந்தியா கூட்டணி இந்தியா கூட்டணி என்கிறார்.
மு.க. ஸ்டாலின் அவர்களே, நாங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு ஆசைப் பட்டிருந்தால் பா.ஜனதாவோடு கூட்டணியில் இருந்திருப்போம். எங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள்தான் முக்கியம்” என்றார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் முதல் கட்டமாக வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி நடைபெறுகிறது.
கோயம்புத்தூரில் பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க சார்பில் சிங்கை ராமச்சந்திரன், தி.மு.க சார்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“