/indian-express-tamil/media/media_files/ElXTI28XhJEj9i1ewfso.jpg)
Edappadi Palaniswamy
சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அந்தந்த மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி,சென்னை அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’கனமழை பெய்யும் என்று வானிலை மையம் ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை விடுத்தும், தமிழ்நாடு அரசு அலட்சியம் காட்டியதால் தான் பெருவெள்ளம் ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் பால், உணவு போன்றவை மக்களுக்கு சரியாக கிடைக்கவில்லை. மழை ஓய்ந்து ஐந்து நாட்கள் ஆகியும் மழைநீர் வடியாத சூழ்நிலை இருக்கிறது.
அதிமுக ஆட்சி காலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு துரித பணிகள் மேற்கொண்டதால் பாதிப்பு குறைந்தது. மேலும் எல்லா இடங்களிலும் அதிகாரிகளில் நியமிக்கப்பட்ட பணிகள் முடிக்கி விட்டு செயல்படுத்தப்பட்டது.
ஆனால் தற்போதைய தலைமைச் செயலாளர் வெள்ளம் வந்தபிறகு என்.எல்.சி.யில் இருந்து அதிக திறன் கொண்ட மோட்டார்களை கேட்டிருப்பது ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டை காட்டுகிறது.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்ததாக சொல்லிவிட்டு, தற்போது 50% பணிகள் மட்டுமே நிறைவடைந்திருப்பதாக கூறுவது ஏன்? 20 சென்டி மீட்டர் மழை பெய்தாலும் ஒரு சொட்டு மழை நீர் தேங்காது என்று சொன்னார்கள் உண்மை தான் ஆனால் குளம் போல் நீர் தேங்கி இருக்கிறது,என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், வெள்ளப்பாதிப்பு குறித்து அரசை பிறகு விமர்சிக்கலாம் என்று கமல்ஹாசன் கூறியது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ‘கமல்ஹாசனை நான் ஒரு அரசியல்வாதியாகவே கருதவில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத்தில் திமுக ஆதரவில் எம்.பி. ஆக. கமல் முயற்சிக்கிறார்.பச்சோந்தியை விட விரைவாக நிறம் மாறும் தலைவர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சியில் அவர் ஒருவர் மட்டுமே இருக்கிறார். எனவே, கமல்ஹாசனின் கருத்துக்கு செவி சாய்க்க தேவையில்லை’, என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.