ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில் உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்துசமய அறநிலையத்துறையை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாதசுவாமி திருக்கோவிலில் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய, காலம் காலமாக பாரம்பரிய தனி தரிசன வழியைப் பயன்படுத்தி வந்தனர். தற்போது ஸ்டாலின் மாடல் அரசின் கீழ் உள்ள அறநிலையத்துறை, திருக்கோவில் நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்புமின்றி அந்த வழியை மூடியிருப்பதோடு, இனி ரூ.200 கட்டணம் செலுத்தினால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்று கூறியிருப்பது உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பக்தர்களிடம் தரிசன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே ராமநாதசுவாமி கோவிலில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு கம்பி வேலிகள் போட்டு அடைத்து வைத்திருப்பதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
“தமிழக மக்கள் தெய்வ நம்பிக்கை மிக்கவர்கள். ஆண்டவன் அருளைப் பெறுவதற்காக மனத்தூய்மையோடு கோவிலுக்கு வரும் உள்ளூர் மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு ஆற்றொன்னா துயரத்தையும், செலவையும் ஏற்படுத்தும் வகையிலும் எடுத்துள்ள இக்கட்டண வசூல் நடவடிக்கைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்று இந்துசமய அறநிலையத்துறையை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.