/indian-express-tamil/media/media_files/2025/01/30/9sMeTDwxw218KNNiNGDU.jpg)
பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்து அடி வாங்கிய அ.தி.மு.க நிர்வாகி பொன்னம்பலம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான குன்றத்தூர் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் பொன்னம்பலம் அ.தி.மு.க-வில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம். இவர் அ.தி.மு.க-வில் குன்றத்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர் அணி இணை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இவருடைய பாலியல் தொல்லை தாங்காமல் அந்த பெண்கள் வேறு வீட்டுக்கு வாடகைக்கு சென்றுள்ளனர். ஆனாலும், விடாத பொன்னம்பலம் அந்த பெண்களை போனில் அழைத்து தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பெண்கள் அதிமுக நிர்வாகி பொன்னம்பலத்தை துடைப்பத்தால் அடித்தனர்.
மேலும், அ.தி.மு.க நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மணிமங்கலம் போலீசார் பொன்னம்பலத்தை கைது செய்து, அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம், பெண்களிடம் ஆபாசமாக பேசுதல், பெண்களை தாக்கியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்து அடி வாங்கிய அ.தி.மு.க நிர்வாகி பொன்னம்பலம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அ.தி.மு.க-வின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, எம்.பொன்னம்பலம் (குன்றத்தூர் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.