Education News In Tamil, TNPSC Group 4 Exam New Announcement: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப் 4 தேர்வி முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களை டி.என்.பி.எஸ்.சி தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதோடு, அவர்கள் அனைவரும் தேர்வெழுத வாழ்நாள் தடைவித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புகாரை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களின் அதிகாரிகளாக செயல்பட்ட 2 தாஷில்தார்களை கைது செய்துள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி அறிவித்தபடி கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த தரவரிசைப் பட்டியல் மற்ற தேர்வர்கள் பலரையும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியது. ஏனென்றல், இப்பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் (1606), கீழக்கரை (1608) ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 40 பேர் மாநில அளவில் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றனர்.
இதில் சமூக இடஒதுக்கீடு ரீதியாக முன்னிலை பெற்றவர்களும் இந்த இரு தேர்வு மையங்களிலேயே தேர்வு எழுதியுள்ளனர். ஒரே மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களில் எப்படி முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றனர். இது போல, எந்த தேர்விலும் நடந்தது இல்லை. எனவே, இந்த மாவட்ட தேர்வு மையங்களில் முறைகேடு நடந்துள்ளதாக மற்ற தேர்வர்கள் குற்றம் சாட்டியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
தரவரிசைப் பட்டியலில், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானவரகள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தேர்வு எழுதியவர்களி முதல் 100 இடங்களில் இடம் பெற்றிருப்பதும் அதில் 15 பே மாநில அளவில் முதல் 15 இடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தது என்பது பிற தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.
இது தொடர்பான புகாரதி தொடர்ந்து தேர்வாணையம், முதல் 40 பேரையும் நேரடியாக அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்து தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு கடிதம் அனுப்பியது. அதன் படி, ஜனவரி 13-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தேர்வர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
விசாரணையில், குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்த தேர்வாணையம், சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள், ராமேசுவரம் பகுதியில் 5 தனியார் பள்ளிகள், ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட தேர்வு மையங்களை டிஎன்பிஎஸ்சி வியாழக்கிழமை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் அளித்த புகாரின் பேரில், குரூப் 4 முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீஸார் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல் கட்ட விசாரணையாக, ராமேசுவரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி, கீழக்கரை வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா ஆகிய இருவரிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.
சிபிசிஐடி போலீஸார், ராமேசுவரம், கீழக்கரை வட்டாட்சியர்களிடம் இந்த மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் மாநில அளவில் முன்னிலை பெற்றது எப்படி என கேள்விகளை எழுப்பியதாகவும் அவர்கள் இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ராமேசுவரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி, கீழக்கரை வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 99 தேர்வர்கள் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அவர்கள் அனைவரும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத வாழ்நாள் தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்து அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், இந்த தரவரிசைப் பட்டியலில், முதல் 100 இடங்களில், முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேருக்கு பதில் வேறு 39 நபர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுள்ளதாகவும், இதுதொடர்பாக புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடவும் டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல், குரூப் 4 தேர்வு முறைகேட்டில் இந்த தேர்வு மையங்களில் தேர்வுப் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்களுக்கும் இடைத் தரகர்களுக்கும் தொடர்பு உள்ளது என டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர்களை டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் தகுதி நீக்கம் செய்ததோடு அவர்கள் தேர்வெழுத வாழ்நாள் தடைவிதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.