கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப் புகழ்பெற்றது. ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர். கேரளா மட்டுமல்லாது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து வந்து சாமி தரிசனம் செய்வர். கோயிலுக்கு இளம் பெண்கள் செல்ல அனுமதி இல்லை.
இந்தநிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்து முகநூலில் கருத்து பதிவிட்ட வழக்கில் பேராசிரியை சுந்தரவள்ளிக்கு எழும்பூர் நீதிமன்றம் ரூ. 3,500 அபராதம் விதித்து உத்தரவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு பம்பை நதிக்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஐயப்ப பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேராசிரியை சுந்தரவள்ளி தமது முகநூல் பக்கத்தில், ஐயப்பன் கோயில் குறித்தும், சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்தும் பதிவிட்டிருந்தார். இதற்கு எதிராக சுந்தரவள்ளி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கூடுதல் தலைமை நீதிமன்றம், பேராசிரியை சுந்தரவள்ளிக்கு ரூ. 3,500 அபராதம் விதித்து உத்தரவிட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil