கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக மின்சாரத் துறையின் மூத்த அதிகாரிகளுடன், இந்திய எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ரோகித் பதக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில், "மின்சாரம் தொடர்பான தீர்வுகள், மின்சாரப் பொருட்கள், உபகரணங்கள், தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்திய எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கண்காட்சி நடைபெற உள்ளது. நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்டில் பிப்ரவரி 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5 நாட்கள் எலெக்ராமா 2023 கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ருமேனியா, தைவான், இங்கிலாந்து உள்ளிட்ட 70 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், பொறியாளர்கள் கலந்து கொள்கின்றனர். 5 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த கண்காட்சி மூலம் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தக விவரங்களை அறிந்து கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளளதாக" அவர் தெரிவித்தார்.
மேலும் தூய்மையான மின்சாரப் பயன்பாட்டை கொண்டு வருவதன் மூலம் ஒட்டுமொத்த வாழ்க்கை முறை மேம்படும் எனவும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான சவால் விருதுகள் அறிமுகம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தொழில் நகரமான கோவையில் கண்காட்சி குறித்தான ஆலோசனைகள் நடைபெறுகிறது. நடைபெறவிருக்கும் எலெக்ராமா கண்காட்சியில் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்க தென் மண்டல தலைவர் பிரகாஷ், எலெக்ராமா 2023 கண்காட்சியின் தலைவர் ஜிதேந்திர அகர்வால், தென் மண்டல துணைத் தலைவர் சுதிர் கோகலே, மாநில ஒருங்கிணைப்பாளர் அருணா ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/