தமிகத்தில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக –வை நிராகரிப்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டத்தை நடத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தான் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெங்கிலும் ஆளும் அதிமுக அரசை குறை கூறி வரும் ஸ்டாலின் ஆளும் கட்சி மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களை சுமத்தி வருகிறார்.
இந்நிலையில், தனது பிரச்சாரத்தின் அடுத்தகட்டமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முருக பக்தர்கள் திருத்தணி முருகனின் பெயரில் வெள்ளி வேல் ஒன்றை திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கியுள்ளனர். முருகனின் ஆறு படை வீடுகளில் 5-வது வீடான திருத்தணியில் இருந்து கடந்த நவம்பர் மாதம் பாஜக சார்பில் வேல்யாத்திரை நடத்தப்பட்டது. இந்த வேல் யாத்திரைக்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது திமுக தலைவருக்கே வேல் பரிசாக கொடுக்கப்பட்டது திமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக திமுக கூட்டணி கட்சிகள் எப்போதும இந்து கடவுளை விமர்சித்து வரும் நிலையில், திமுக தலைவருக்கு வேல் பரிசளிக்கப்பட்டது வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்கு வங்கியை அதிகரிக்கும் முயற்சியா என்பது குறித்து பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் ஸ்டாலினுக்கு வேல் பரிசளிக்கப்பட்டது தொடர்பாக ட்விட்டரில் பலவிதமான கருத்துக்களை பதிவாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"