2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், சிவகங்கை தொகுதியில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ப.சிதம்பரம், அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட, 3,354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் முன் விசாரணையில் உள்ளது.
ஏற்கனவே கடந்த 4 ஆம் தேதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்த சிதம்பரம், இன்று இரண்டாவது நாளாக சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சியம் அளித்தார்.
அவரிடம் குறுக்கு விசாரணை செய்த ராஜகண்ணப்பன் தரப்பு வழக்கறிஞர் ராஜசேகரன், கடந்த 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் எழுதிய புத்தகத்தில் அரசியல் ஒரு வியாபாரம் என்று குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்வது முதலீடு என நினைக்கிறீர்களா?, வாக்கு எண்ணிக்கையில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் வித்தியாசம் ஏற்பட்டதா? என்பன உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினார்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறிய குற்றச்சாட்டுக்களை சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்தார்.
ப.சிதம்பரத்திடம் 2 மணி நேரத்திற்கும் மேல் நடந்த குறுக்கு விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து, சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ராஜகோபாலிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என ப.சிதம்பரம் தரப்பில் கோரப்பட்டது.
அதே போன்று சிதம்பரத்தின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள ராஜீவ் காந்தி என்ற வேட்பாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.முருகேந்திரன், தங்கள் தரப்பிலும் சிதம்பரத்தை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் ஏனென்றால் வழக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு வழக்கு தொடர்ந்த ராஜகண்ணப்பன் தற்போது திமுக கட்சியுடன் தோழமையுடன் உள்ளார். ஏற்கனவே திமுக கட்சியுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட சிதம்பரத்திற்கு எதிரான வழக்கு நீர்த்துப் போகச் செய்ய வாய்ப்புள்ளது எனவே எங்கள் தரப்பிலும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஆனால், இதற்கு ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்து அன்று வழக்கறிஞர்கள் வழக்கின் வாதங்களை எடுத்துவைக்க உத்தரவிட்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"