/indian-express-tamil/media/media_files/2025/08/04/election-commission-2025-08-04-07-55-06.jpg)
சென்னை தி.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் மொத்தமாக பெயர்களைச் சேர்ப்பது மற்றும் நீக்குவது தொடர்பாக, அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யநாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில், சுமார் 13,000 அ.தி.மு.க. ஆதரவாளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கவுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. சிறப்பு தீவிர திருத்தம் அடுத்த வாரம் மேற்கொள்ளப்பட உள்ளதால், சத்யநாராயணனின் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் உறுதி அளித்தது.
இதையடுத்து, பீகாரில் எஸ். ஐ.ஆர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு உள்பட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு திருத்தப் பணியின்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான புகார்கள் முறையாக விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us