Election Results 2019: மக்களவைத் தேர்தல் முடிவுகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகம், புதுவையில் மொத்தம் 39 தொகுதியில் நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களை வென்றுள்ளது. இன்னும் சில தொகுதிகளில் இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை எனினும், வேட்பாளர்களின் முன்னிலை திமுக-வின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது.
அதிமுக கூட்டணியில், கூட்டணி கட்சிகள் அத்தனையும் வாஷ் அவுட் ஆகி விட, தேனியை மட்டும் கைப்பற்றுகிறது அதிமுக.
திமுக தலைவர் கருணாநிதி மறைந்துவிட்ட நிலையில், கூட்டணி அமைத்து, கழக உறுப்பினர்களை ஒன்று திரட்டி, அதிகப் பொறுப்புணர்வுடன் இத்தேர்தலை சந்தித்தார் ஸ்டாலின். இந்த முதல் தேர்தலே அவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது. இதனால் திமுக உடன் பிறப்புகளில் மிகுந்த மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் காணப்படுகிறார்கள்.
இதற்கிடையே அறிவாலயத்துக்கு வருகை புரிந்தார் மு.க.ஸ்டாலின். மிகுந்த ஆரவாரத்துடன் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது பேசிய அவர், “மக்களவை, சட்டசபை இடைத்தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை தேடித்தந்த தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு நன்றி. இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இதற்காக உழைத்த தொண்டர்கள், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
இந்த வெற்றியைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், களத்தில் இறங்கும் முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். அதன்படி இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறோம். இப்போது ஒரே ஒரு கவலைதான். அது, கலைஞர் இந்த வெற்றியைப் பார்க்க முடியவில்லையே என்பதுதான்” என தொண்டர்கள் மத்தியில் உருக்கமானார் ஸ்டாலின்.