Advertisment

அ.தி.மு.க வரவு செலவு கணக்கு; இடைக்காலப் பொதுச் செயலாளர் இ.பி.எஸ்; அங்கீகரித்த தேர்தல் ஆணையம்?

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவு கணக்கை ஏற்றுக்கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
AIADMK, Edappadi K Palaniswami, EPS, OPS, Election Commission, Tamilnadu

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவு கணக்கை ஏற்றுக்கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Advertisment

அ.தி.மு.க-வில் ஓ. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிலவி வருகிறது. இதனால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஒருங்கிணைப்பாளர் பதவி காலவதியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டதுடன், ஓ.பன்னீர்செல்வத்தில் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி அளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தற்போது நடைபெற்று வருகின்றது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொதுக்குழு தீர்மானங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சமர்பிக்கப்பட்ட நிலையில், தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று ஓபிஎஸ் தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 3-ம் தேதி இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தில் 2021-22-ம் ஆண்டிற்கான அ.தி.மு.க வரவு செலவு கணக்கு தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வரவு செலவு கணக்கை ஏற்றுக் கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆவணங்களை பதிவிட்டுள்ளது. அதில், எடப்பாடி பழனிசாமி பெயரில் அ.தி.மு.க தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரித்துறை கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் அங்கீகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து ஓ. பன்னீர்செல்வத்திடம் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், அந்த வரவு செலவு கணக்கு தான் பொருளாளராக இருந்தபோது தயாரிக்கப்பட்டது என்றும், ஜி20 மாநாடுக்கு தலைமை ஏற்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், எந்த பாதிப்பும் இல்லை என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Aiadmk O Panneerselvam Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment