சென்னை மெட்ரோ நிலையங்களில் சோதனை முயற்சிக்காக மின்சார பைக்குகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் முதற்கட்டமாக ஆலந்தூர், கிண்டி, வடபழனி மற்றும் அண்ணாநகர் டவர் என 4 மெட்ரோ நிலையங்களில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக, சென்னை மெட்ரோ நிர்வாகத்துடன் இணைந்து, வோகோ என்கிற தனியார் நிறுவனம், மின்சார இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மின்சார பைக் சேவையை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் பயணிகள் தங்களது ஃபோனில் ’வோகோ’ என்கிற ஆப்பை பதிவிறக்கம் செய்து, ஓட்டுநர் உரிமத்தை பதிவேற்றம் செய்துக் கொள்ள வேண்டும்.
இவை சரி பார்க்கப்பட்ட பின்பு இந்த வசதியை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்குக் கட்டணமாக நிமிடத்திற்கு 1 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால் சென்னையில் உள்ள அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் இந்த வசதி விரிவுப் படுத்தப்படும்.
தவிர, ஏற்கனவே மெட்ரோ நிலையங்களில் சைக்கிள் வசதி இருப்பது குறிப்பிடத்தக்கது.