திருச்சியில் இருந்து கோவை நோக்கி 30 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த நியூகோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஆம்னி பேருந்து ஒன்று, இன்று அதிகாலை 3:30 மணியளவில் கருமத்தம்பட்டி சென்னி ஆண்டவர் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் தடுப்புச் சுவரில் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்து புகை கிளம்பியது. இதனை அடுத்து, சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர், பேருந்தில் இருந்த பயணிகளை உடனடியாக கீழே இறக்கினர்.
பயணிகள் அனைவரும் இறங்கிய சிறிது நேரத்திலேயே, பேருந்தின் பேட்டரியில் தீ விபத்து ஏற்பட்டு, மளமளவென பேருந்து முழுவதும் பரவி எரிந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். பயணிகள் அனைவரும் முன்கூட்டியே பத்திரமாக இறக்கிவிடப்பட்டதால், இந்த விபத்தில் எந்தவித உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் மாற்று பேருந்து மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.