கோவையில் அண்ணா சிலை அருகே உள்ள கொடிசியா அலுவலகத்தில் தமிழ்நாடு தொழில் அமைப்புகள் சார்பில் மின்கட்டண உயர்வு தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கொடிசியா, இந்திய தொழில் வர்த்தக சபை, டேக்ட், கோப்மா, கிரில் தயாரிப்பாளர் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கொடிசியா தலைவர் கார்த்திகேயன், "ஏற்கனவே உயர்த்தப்பட்ட மின்கட்டணம் மற்றும் நிலைக்கட்டணம் காரணமாக தொழில்களை நடத்த முடியாத நிலை உள்ளது. மின்கட்டண உயர்வு உற்பத்தி செலவுகளை அதிகரிக்கிறது. மின் நிலைக்கட்டணம் 450 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளதால், கடந்த 3 ஆண்டுகளில் 10 சதவீதம் வரை தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. ஆண்டுதோறும் மின்கட்டணம் உயர்த்தப்படுவதை விட, மின் நிலைக்கட்டணம் ஒரேயடியாக உயர்த்தியதே தொழில் முடக்கத்திற்கு முக்கிய காரணம். மின்கட்டண உயர்வு மற்றும் மின் நிலைக்கட்டணத்தை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு முழுவதும் உள்ள 50 தொழில் அமைப்புகள் ஒன்றிணைந்து முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்," என்று தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய தமிழ்நாடு மின்நுகர்வோர் சங்கத்தின் தலைவர் பிரதீப், "ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயர்த்துவது தொழில் துறைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மின்கட்டணத்தைக் குறைக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. சோலார் மேற்கூரைக்கு விதிக்கப்படும் நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். சோலார் மேற்கூரை அமைக்க அரசு 25 சதவீதம் மானியம் வழங்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
டேக்ட் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் பேசுகையில், "குறுந்தொழில்கள் நிறைந்த கோவை மாவட்டத்தில் மின் கட்டணம் மற்றும் மின் நிலைக்கட்டண உயர்வு காரணமாக தொழில்கள் பெரும் நெருக்கடியில் உள்ளன. அண்மையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் 50 கிலோ வாட் வரை கட்டண உயர்வு இல்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 112 கிலோ வாட் வரை பயன்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் அதிகம் என்பதால், இது பயனளிக்காது. மின் கட்டண உயர்வை விலக்கி 112 கிலோ வாட்டாக உயர்த்த வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்துவோம்," என்று குறிப்பிட்டார்.
கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளர் நலச்சங்கத்தின் தலைவர் திருமலை ரவி பேசுகையில், "வாடகை, மின்கட்டணம், சம்பளம், மூலப்பொருட்கள் விலை உள்ளிட்டவை உயர்வு காரணமாக கிரில் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 25 சதவீதம் வரையிலான கிரில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மின் கட்டணத்தைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையை பாதுகாக்கப்பட்ட தொழில் மண்டலமாக அறிவித்து தொழில் துறையினருக்கு சலுகைகளை வழங்க வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தார்.
செய்தி - பி. ரஹ்மான்.