மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் போராட்டம் நடத்தவுள்ளனர்.

வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதியன்று ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கும் அரசாணையின் நகல் எரிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தில் சார்பாக, மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், “கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து பணிமனைகளிலும் பார்க்கிங் பணி, வாகனங்களில் பழுது சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, பணிமனை ஓட்டுநர்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை கைவிடுமாறு முன்பே கடிதம் அனுப்பியிருந்தோம். அதன்பிறகு, முற்றுகைப் போராட்டமும் நடத்தினோம்.
ஓய்வு வயதை அதிகரித்துள்ள நிலையில், அனைத்து பணிமனைகளிலும் சீனியாரிட்டி அடிப்படையில், பேருந்து ஓட்டுநர்களுக்கு பணியை வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது”, என்று அதில் தெரிவித்துள்ளனர்.
இந்த கடிதத்திற்கு பதில் வராத நிலையில், அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி, “ஒப்பந்த முறையில் ஓட்டுநர் நியமனத்தைக் கொண்டு வருவதற்கு வழிவகை செய்யும் அரசாணை நகல் எரிப்புப் போராட்டம் வரும் 21-ம் தேதி, மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் நடைபெறும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.