சென்னை பெருங்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (33). சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், மார்ச் 25-தேதி ( சனிக்கிழமை) இரவு ஜெய்கணேஷ் தனது வீட்டருகே நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கறிஞர்கள் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த 27-ம் தேதி இக் கொலை சம்பவம் தொடர்பாக 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண்.1-ல், சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பகுதியைச் சேர்ந்த முருகன்(26), நுங்கம்பாக்கம் தெற்கு மாடவீதியைச் சேர்ந்த பிரவீன் (23), மண்ணூர்பேட்டை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் (27) ஆகியோர், நடுவர் ராதிகா முன்னிலையில் சரணடைய வந்தனர்.
சாலை மறியல்
இந்தநிலையில், ஜெய்கணேஷ் கொலை சம்பவத்தை தொடர்ந்து வழக்கறிஞர்கள் நேற்று (மார்ச் 28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை’ அரசு இயற்ற வேண்டும். ஜெய்கணேஷ் கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரசு வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து பேராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்தனர். வழக்கறிஞர்கள் போராட்டத்தால் என்.எஸ்.சி போஸ் சாலை மற்றும் ராஜாஜி சாலை ஆகிய இடங்களில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“