திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகே உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் எஸ்.ஆர்.எம் ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டல் கட்டியுள்ள இடம் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான இடமாக இருக்கிறது. 1995-ம் ஆண்டு எஸ்.ஆர்.எம் ஹோட்டல் கட்டுவதற்காக குத்தகைக்கு விடப்பட்டதன்படி, 30 ஆண்டுகால குத்தகைக்கு எஸ்.ஆர்.எம் நிறுவனத்தினர் எடுத்துள்ளனர். வருடம் 75 லட்சம் ரூபாய் செலுத்துவது என்கிற உடன்பாட்டின்படி இந்த குத்தகை எடுக்கப்பட்டுள்ளது.
குத்தகை காலம் நேற்றுடன் (ஜூன் 13) முடிவடைந்த நிலையில் நேற்று வந்த அதிகாரிகள் ஹோட்டலை தங்களிடம் ஒப்படைக்குமாறு நோட்டீஸ் கொடுத்து சென்றுள்ளனர். அவசர அவசரமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்பார்த்த லாபம் கிடைக்காத நிலையில் கூடுதலாக 10 வருடம் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம், ஆனால், அவசரகதியில் ஹோட்டலை கையகப்படுத்தும் முயற்சியில் சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம் வழக்கு விசாரணையில் இருக்கும்போது ஹோட்டலை கையகப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க-வை எதிர்த்து போட்டியிட்டதால் ஹோட்டலை கையகப்படுத்தும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குத்தகை காலம் முடிவடைந்ததையடுத்து, ஹோட்டலை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியில் அதிகார அத்துமீறலில் செயல்படுவதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அரசியல் கால் புணர்ச்சி காரணமாக திருச்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் ஹோட்டலை மூடும் முயற்சியில் தி.மு.க அரசு ஈடுபட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குடும்பத்தின் நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேருவை எதிர்த்துப் போட்டியிட்ட காரணத்திற்காக பழிவாங்கும் நடவடிக்கையில் தி.மு.க ஈடுபட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான இடத்தை 1994 ஆம் ஆண்டு முறையாக குத்தகை பெற்று சுமார் 30 ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வரும் எஸ்.ஆர்.எம் குழுமத்தினை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. எஸ்.ஆர்.எம் குழுமத்தால் கட்டப்பட்ட ஹோட்டல் கட்டிடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பை இடிக்க திட்டமிட்டுள்ளதா தி.மு.க அரசு எஸ்.ஆர்.எம் நிறுவனம் குத்தகைக் காலத்தை நீட்டிக்க கோரி 3 முறை மனு அளித்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புறக்கணித்து வந்திருக்கிறது திமுக அரசு. எனவே, இது தொடர்பாக எஸ்.ஆர்.எம் குழுமம் நீதிமன்றத்திடம் முறையிட்டு அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கையில் தி.மு.க அரசு உள்நோக்கத்தோடு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் செய்யலாகும்.
தி.மு.க ஆட்சியில் அதன் நிர்வாகிகள் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவது வாடிக்கையானது காலாகாலமாக நில ஆக்கிரமிப்புகளும் கட்டப்பஞ்சாயத்தும் அத்துமீறல்களும் தி.மு.க ஆட்சியின் ஒரு அங்கமாகவே விளங்கி வருகின்றன. ஆட்சி அதிகார திமிறில் அரசியல் காரணங்களுக்காக மற்றவர்களை பழிவாங்குவது தி.மு.க-வுக்கு வழக்கமானது
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக கூட்டணிக்கு வரவில்லை என்பதற்காக மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின்மண்டபத்தை இடித்து பழி தீர்த்துக் கொண்ட தி.மு.க இன்றும் திருந்தவில்லை என்பதே தற்போது திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை கைப்பற்ற நடக்கும் முயற்சி நிரூபிக்கிறது.
கடந்த 2006 - 2011 ஆட்சி காலத்தில் இதுபோன்ற அராஜக செயல்பாடுகளால் தான் தி.மு.க-வை மக்கள் 10 ஆண்டுகள் தூக்கி எறிந்தார்கள் என்பது சிறிதேனும் நினைவில் இருக்குமேயானால் பொதுமக்களின் வாக்குகள் மீது பயம் இருக்குமேயானால் மீண்டும் அதே போன்ற அநியாயமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். ஆனால், மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றி செயல்படும் 3 ஆண்டுகால இருண்ட ஆட்சியால் மீண்டும் தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்பது நன்கு தெரிந்ததால் முடிந்த வரை குடும்பத்திற்காக சுருட்டுவோம் என்ற நோக்கத்தில் மட்டுமே செயல்படும் தி.மு.க திருந்த வாய்ப்பே இல்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி இருக்கிறது.
சாமானிய பொதுமக்கள் நீதிமன்றம் மீது கொண்டுள்ள நம்பிக்கையை சிதைப்பதைப் போல நடந்து கொள்ளும் தி.மு.க அரசை வன்மையாக கண்டிக்கிறேன். வழக்கு நிலுவையில் இருக்கையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்படும் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை தி.மு.க அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“