/indian-express-tamil/media/media_files/BC5O2t7zE7qUdKNU8QCm.jpeg)
மணல் குவாரி முறைகேடு வழக்கு; அமலாக்கத்துறை முன் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்
தமிழகத்தில் உள்ள முக்கியமான மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் கிடைத்த வருமானம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடந்ததாகவும் புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள், மாநில நீர்வளத் துறையின் மூத்த அதிகாரிகள், ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
இதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால தடை விதித்த நிலையில், அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், மணல் குவாரி முறைகேடு தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திருச்சி, தஞ்சை, கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் 5 பேரும் இன்று காலை 10:30 மணிக்கு ஆஜராகினர்.
இந்த நிலையில் திடீரென விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத் துறையினர் தற்போது மாவட்ட ஆட்சியர்கள் ஐந்து பேரையும் இரண்டு கார்களில் அழைத்துக் கொண்டு வேறு இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட ரெய்டில் திரட்டப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என இ.டி அதிகாரிகள் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.