Advertisment

தமிழக போலீஸ் மீது 2-வது முறையாக புகார்; டி.ஜி.பி.,க்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பிய இ.டி

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரெய்டு நடத்திய விவகாரம்; லஞ்ச ஒழிப்புத்துறை மீது தமிழக டி.ஜி.பியிடம் 2 ஆவது முறையாக புகார்; அமலாக்கத்துறை நினைவூட்டல் கடிதம்

author-image
WebDesk
New Update
 ED officer Ankit Tiwari arrested cae First information report released tamil news

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரெய்டு நடத்திய விவகாரம்; லஞ்ச ஒழிப்புத்துறை மீது தமிழக டி.ஜி.பியிடம் 2 ஆவது முறையாக புகார்; அமலாக்கத்துறை நினைவூட்டல் கடிதம்

மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனையிட்ட தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு எதிராக அமலாக்கத் துறையினர் 2 ஆவது முறையாக தமிழக டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளனர். இதை நினைவூட்டல் கடிதமாக டி.ஜி.பி.,க்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisment

திண்டுக்கல் அரசு மருத்துவரை வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்க லஞ்சம் பெற்ற புகாரில் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கைது செய்தனர். அரசு மருத்துவரிடம் இருந்து அங்கித் திவாரி இரண்டு தவணைகளில் மொத்தம் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கித் திவாரி கைதைத் தொடர்ந்து, அவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் மடிக்கணினி மற்றும் பல முக்கிய அம்சங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அங்கித் திவாரிக்கு சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், தமிழகத்தில் முதல்முறையாக மத்திய அரசு அலுவலகமான அமலாக்கத்துறை அலுவலகத்தில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நுழைந்து சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் உள்ள அங்கித் திவாரி அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் உதவி இயக்குநர் பிரிஜிஸ்ட் பெனிவால் தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவாலுக்கு கடந்த 2-ம் தேதி புகார் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், ‘டிசம்பர் 1 ஆம் தேதி மதியம் 1.15 மணிக்கு தங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு இரண்டு நபர்கள் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நுழைந்தனர். அவர்களிடம் அடையாள அட்டையை கேட்டபோது அங்கிருந்து நழுவிவிட்டனர். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து லஞ்ச ஒழிப்புத்துறையை சேர்ந்தவர்கள் என கூறிக்கொண்டு 35 பேர் கும்பலாக அலுவலகத்திற்குள் புகுந்தனர். இவர்களும் அடையாள அட்டையை காட்டவில்லை.

அதில் சத்தியசீலன் என்பவர் மட்டும் லஞ்ச ஒழிப்பு துறையின் மதுரை டி.எஸ்.பி என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். மற்றவர்கள் யாரும் சீருடை அணிந்திருக்கவில்லை. அது மட்டுமல்லாது பேட்ச் ஏதும் அவர்கள் உடையில் இல்லை. அவர்கள் அனைவரும் அன்று மதியம் தொடங்கி அடுத்த நாள் காலை வரை எங்களது அலுவலகத்திலேயே தங்கினர்.

அவர்கள் அங்கித் திவாரி அறைக்குள் நுழைந்து, சோதனை என்ற பெயரில் பல மணி நேரம் இருந்தனர். அங்கு இருந்த சில ஆவணங்களை அவர்களுக்கு தேவையின்றி திருடிச் சென்றுள்ளனர். வழக்குக்கு சம்பந்தமில்லாத ஆவணங்களையும் கைப்பற்றி சென்றுள்ளனர்.

இப்படியாக மதுரை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை சட்ட விரோதமானது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எனக்கூறி மதுரை மண்டல அலுவலகத்திற்குள் நுழைந்தவர்கள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். அனுமதியின்றி அலுவலகத்திற்குள் புகுந்த 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும்" என கூறப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது வரை அமலாக்கத்துறை புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மாறாக எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழக காவல்துறை சார்பில் அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அமலாக்கத் துறையினர் தமிழக டி.ஜி.பி.,க்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதுமட்டும் அல்லாமல் கடந்த 2-ம் தேதி அனுப்பிய புகார் கடிதத்தில் தெரிவித்தது போன்று சம்பந்தப்பட்ட தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு டிஜிபிக்கு நினைவூட்டலாக 2-வது கடிதத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Enforcement Directorate dgp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment