Advertisment

திருச்சி மணல் குவாரிகளில் இ.டி. ரெய்டு: லாரிகளை பார்த்து அதிர்ச்சி

கணக்கில் வராமல் பெருமளவில் மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக ஆஃப்லைனிலும் விற்பனை நடப்பதாக சந்தேகிக்கும் அமலாக்கத்துறை, மணல் விற்பனையில் பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு நடந்திருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது.

author-image
WebDesk
New Update
Trichy sand quarries_ED Raid

ஆன்லைனில் மணல் வாங்குபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது.

Enforcement directorate Raid : தமிழ்நாட்டில்  ஆற்று மணல் விற்பனையை அரசே தமிழ்நாடு நீர்வளத்துறை மூலம் விற்பனை செய்து வருகிறது. ஆன்லைன் மூலம் விற்பனை மேற்கொள்ளப்படுகிறது.

ஆன்லைனில் மணல் வாங்குபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது. இவ்வாறு விற்கப்படும் மணல் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு உரிய வரி செலுத்தப்படுகிறதா என்பது குறித்து அமலாக்கத்துறை ஆய்வு மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

மேலும், கணக்கில் வராமல் பெருமளவில் மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக ஆஃப்லைனிலும் விற்பனை நடப்பதாக சந்தேகிக்கும் அமலாக்கத்துறை, மணல் விற்பனையில் பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு நடந்திருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது.

பல்வேறு குழுக்களாக பிரிந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், தமிழகத்தின் வேலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மணல் அள்ளும் மையங்கள், மணல் விற்பனை செய்யப்படும் இடங்கள், மணல் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

துணை ராணுவப்படையின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் தமிழக காவல்துறையின் பாதுகாப்பைக் கோரவில்லை எனத் தெரிகிறது.

அதேநேரத்தில், தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது குறித்த தகவல் மட்டும் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான அலுவலகத்திலும், வல்லத்திரக்கோட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேபோல், திருச்சி கொண்டையம்பேட்டை பகுதியில் உள்ள மணல் விற்பனையகத்திலும், மணல் ஒப்பந்ததாரர் ரத்தினம் என்பவருக்குச் சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவல் அருகே கொள்ளிடம் ஆற்றில் தாளக்குடி அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் புதுக்கோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் அரசு அனுமதியுடன் மணல் குவாரி நடத்தி வருகிறார்.

இந்தக் குவாரியில் அரசு அனுமதித்த டோக்கனை விட அதிக லாரிகள் மணல் அள்ளுவதாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில் இரண்டு கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் கொள்ளிடம் மணல் குவாரி மற்றும் மணல் இருப்பு வைத்திருக்கும் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் கொள்ளிடம் கரையின் மறுபுறம் தாளக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியிலும் மற்றொரு அதிகாரி குழு சோதனை செய்து வருகின்றனர். அதிகாரிகள் சோதனையின் போது மத்திய துணை ராணுவ படையை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் மணல் குவாரியில் இரண்டு பொக்லின் மட்டும் உள்ள நிலையில் அதிகாலையில் நான்குக்கு மேற்பட்ட பொக்லின் இருந்துள்ளது. மணல் குவாரியில் சட்டவிரோதமாக எவ்வளவு பணம் இருக்கிறது என்பது குறித்தும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படை பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் அரசால் தாளக்குடி, மாதவ பெருமாள் கோவில், கூகூர் பகுதிகளில் குவாரிகள் அமைக்கப்பட்டு மணல் அள்ளப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையிலான லாரிகளில் மணல் அள்ள வேண்டும். 

அதை தாண்டி 1000க்கணக்கில் லாரிகள் மூலம் அள்ளப்பட்டுள்ளது அமலாக்கதுறை சோதனையில் தெரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசுக்கு வருவாய் வரமால் யாருக்கு இவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை சேகரித்து அமலாக்கதுறை அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

முன்னதாக திருச்சி காவிரி, கொள்ளிடம் ஆற்றில் கல்லணை வரை பல்வேறு இடங்களில் அரசின் அனுமதிப்பெறாமல் மணல் மாபியாக்கள் மணல் அள்ளிக்கடத்திக்கொண்டிருப்பதாக பலமுறை சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர், முதல்வர் என மனுக்களை அனுப்பி வந்த நிலையில் தற்போது அமலாக்கத்துறையின் இந்த ரெய்டு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் கொஞ்சம் ஆறுதலை தந்திருக்ப்பதாக  மணல் குவாரிகளை சுற்றியுள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy Enforcement Directorate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment