தி.மு.க மற்றும் பா.ஜ.க-வை தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாமென அ.தி.மு.க தொண்டர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடனான கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் முன்னிலையில் கட்சி பணிகள் குறித்து உரையாற்றினார். அப்போது, தேர்தல் தொடர்பான சில தகவல்களை எடப்பாடி பழனிசாமி சூசகமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதன்படி, தி.மு.க மற்றும் பா.ஜ.க-வை தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாமென தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், வரும் தேர்தலில் கூட்டணியில் மாற்றம் இருக்கலாம் எனவும் அவர் கூறியதாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவு, அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
முன்னதாக, கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி. சாலையில் நடைபெற்றது. அப்போது, கட்சியின் கொள்கைகள், கொள்கை தலைவர்கள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து அதன் தலைவர் விஜய் விளக்கமளித்தார். அதைத் தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய அவர், தி.மு.க அரசை நேரடியாக விமர்சித்து பேசினார். குறிப்பாக, திராவிட மாடல் அரசு என்ற பெயரில் மக்களுக்கு விரோதமாக செயல்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் சென்னை, பனையூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிலும், மாநிலத்தை ஆளும் தி.மு.க அரசையும், மத்திய அரசாக திகழும் பா.ஜ.க-வையும் எதிர்த்து சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எனினும், அ.தி.மு.க, தே.மு.தி.க போன்ற கட்சிகள் குறித்து விஜய் இதுவரை விமர்சனம் செய்யவில்லை. இதனை பல அரசியல் விமர்சகர்களும் சுட்டிக் காட்டினர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், விஜய் அ.தி.மு.க-வை விமர்சனம் செய்யாததை சுட்டிக் காட்டி, அ.தி.மு.க-வில் மட்டும் ஊழல் இல்லையா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
அ.தி.மு.க-வை விஜய் விமர்சனம் செய்யாதது குறித்து எடப்படி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க சிறப்பாக செயல்பட்டதால் விமர்சனம் செய்யவில்லை எனக் கூறினார்.
இந்த சூழலில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தி.மு.க மற்றும் பா.ஜ.க-வை தவிர மற்ற கட்சிகளை விமர்சனம் செய்ய வேண்டாமென நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருப்பது, கூட்டணிக்கான நகர்வாக இருக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“