'நீதிக்கும் தர்மத்துக்கும் கிடைத்த வெற்றி': ஐகோர்ட் தீர்ப்பை வரவேற்று இ.பி.எஸ் பேச்சு
ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், 'நீதிக்கும் தர்மத்துக்கும் கிடைத்த வெற்றி' என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு தீர்ப்பு குறித்து, சேலத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு தீர்ப்பு வழங்கினர். அதில், அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓ.பி.எஸ் உள்ளிட்டோரின் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.
Advertisment
மேலும், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளதால் அந்த தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும், தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும், பொதுக்குழு தீர்மானம்கள் செல்லும் எனவும் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள அ.தி.மு.க தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு தீர்ப்பு குறித்து, சேலத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளது. அ.தி.மு.க என்பது ஒன்றுதான். அ.தி.மு.க பலமாக இருக்கிறது. அ.தி.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க மிகப்பெரிய வெற்றியை பெரும். கட்சிக்கு எதிரானவர்களை அ.தி.மு.க ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது." என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil