தமிழகம் முழுவதும் நிறைவடைந்த பல்வேறு திட்டப் பணிகளை சென்னையில் இருந்தவாறு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று (பிப் 22) திறந்து வைத்தார். அதன்படி, திருச்சி மாநகர் கீழப்புலிவார் சாலையில் உள்ள முகமதியர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக ஆறு வகுப்பறை கட்டடங்களையும் அவர் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக டி.ஐ.பி.ஆர் வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நேரலையில் முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது படங்களுடன் கூடிய காணொளியும் ஒளிபரப்பானது. இதனை எதிர்பார்க்காத தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பள்ளிகல்வித் துறை அதிகாரிகள் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து, ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதன் பின்னர், காணொளி மீண்டும் இயக்கப்பட்ட போது சீராக இயங்கியது. எனினும், காணொளியில் இவர்களது படம் எவ்வாறு ஒளிபரப்பானது என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு, மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
செய்தி - க. சண்முகவடிவேல்