முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். இதில், முதல்வர் பழனிசாமி பேசுகையில், "திருச்சியில் காவல் ஆய்வாளரால் பெண் இறந்தது துரதிர்ஷ்டவசமானது. உஷா குடும்பத்தினருக்கு இழப்பீடு தருவது அரசின் பரிசீலனையில் உள்ளது. கர்ப்பிணி பெண் பலியான விவகாரத்தில், காவல் ஆய்வாளர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், தமிழகத்தில் வெற்றிடம் என்று எதுவும் இல்லை. நடைபெறும் அதிமுக ஆட்சியே எம்.ஜி.ஆர் ஆட்சிதான்" என்று சமீபத்தில் எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்தின் கருத்துக்கு பதில் தெரிவித்தார்.
மேலும், ஹெச்.ராஜா விவகாரம் குறித்து பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, "தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், "பெரியார் விவகாரத்தில் ஹெச்.ராஜாவின் விளக்கம் குறித்து ஆராய்ந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும். ஹெச்.ராஜாவின் சர்ச்சை கருத்து கண்டனத்திற்குரியது. முகநூல் நிர்வாகிதான் கருத்து பதிவிட்டார் என தெரிவித்தது அபத்தமானது. பெரியார் சிலை குறித்து ஹெச்.ராஜா பேசியதற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
More details awaited...