EPS appeals Chennai high court on ADMK general council verdict: ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒற்றைத் தலைமை கோரிக்கையால் ஜூன் 23 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் முடிவடைந்தது. அந்தக் கூட்டத்தில், ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என்றும், ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், இ.பி.எஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: மதிய உணவு தொடர்பாக புகார் தெரிவித்த ஐகோர்ட் நீதிபதி; நீதிமன்ற ஊழியர் சஸ்பெண்ட்
இதனையடுத்து ஜூலை 11 ஆம் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க கோரி, ஓ.பி.எஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் நேற்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். அதில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனையடுத்து, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.ஸ், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது முழு ஒத்துழைப்பு வழங்கினோம், அந்தநிலை மீண்டும் தொடர வேண்டும். கசப்புகளை மறந்து விட்டு அ.தி.மு.க ஒன்று பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். கசப்புகளை மறந்துவிட்டு வாருங்கள்.
அன்பு சகோதரர் நானும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து சிறப்பாக செயல்பட்டோம். இரட்டை தலைமை என்பது பிரச்சினை இல்லை. கூட்டுத் தலைமையாக செயல்படுவோம். இதற்கு முன் ஏற்பட்ட அனைத்து கசப்புகளையும் மறந்து விடலாம், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இ.பி.எஸ்-க்கு அழைப்பு விடுத்தார்.
ஆனால் ஓ.பி.எஸ் அழைப்பை கண்டுக்கொள்ளாத இ.பி.எஸ் மேல்முறையீடு செய்துள்ளார். தனி நீதிபதி தீர்ப்பை எதிர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil