/indian-express-tamil/media/media_files/2025/06/22/eps-2025-06-22-09-17-44.jpg)
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அன்னூர் அருகே உள்ள ஒட்டர்பாளையம் ஊராட்சி ஜீவா நகரை சேர்ந்தவர்.இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வுத் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது உடல் அவரது வீடு அமைந்துள்ள கோவை அன்னூர் ஒட்டர்பாளையம் ஊராட்சி ஜீவா நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே செல்வராஜ், அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி அருண்குமார் உள்ளிட்டோர் நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, "வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பிரச்சனைக்காக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சட்டமன்றத்தில் பேசியவர், அவரது கல்லூரி காலம் முதலே அதிமுகவில் இணைந்து திறமையான முறையில் பணியாற்றியவர். அவரது இழப்பு தொகுதி மக்களுக்கும் கட்சிக்கும் பேரிழப்பு" என தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.