வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டும் என அ.தி.மு.க.,வின் அவசர செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து, பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், பொதுச்செயலாளர் தேர்வுக்கு ஒப்புதல் வழங்கும் அ.தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: அடுத்த 8 மாதம் ரணகளம்; மோடி விரும்பும் அரசியல் இதுதான்: அண்ணாமலை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட 300 செயற்குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். இந்த அ.தி.மு.க அவசர செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம் பின்வருமாறு:
அ.தி.மு.க அவசர செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அ.தி.மு.க மாநாடு நடைபெறும்
2 கோடி புதிய உறுப்பினர்களை அ.தி.மு.க.,வில் இணைக்க இலக்கு வைத்து உழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்
அ.தி.மு.க பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் இ.பி.எஸ் அ.தி.மு.க.,வின் மூன்றாவது அத்தியாயம் என குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றம்
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றிபெற உழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்
நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, கழகத்தின் சார்பில் பூத் கமிட்டிகளை விரைந்து அமைக்க தீர்மானம் நிறைவேற்றம்
தி.மு.க பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், சட்டமன்ற தேர்தலின்போது அளித்த தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்
தி.மு.க ஆட்சியின் அராஜகங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஐடி விங் நிர்வாகிகள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மீது, விடியா அரசால் தொடர்ந்து பொய் வழக்குகள் போட்டு வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்
கழகத்தின் சார்பில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களை நடத்துவதற்குக் கூட அனுமதி மறுக்கும் மக்கள் விரோத தி.மு.க அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்
தி.மு.க அரசு பதவியேற்ற நாள் முதல் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, கொலை, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு, பாலியல் வன்கொடுமை முதலான சட்டவிரோதச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய தி.மு.க அரசுக்கு கடும் கண்டனம்
தமிழ் நாட்டின் கடன் சுமையைக் குறைப்போம் என்று வாக்குறுதி அளித்து, கடன் அளவைக் குறைக்காமல்; மேலும் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை அதிகப்படுத்தி உள்ள தி.மு.க அரசுக்கு கடும் கண்டனம்
விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி மற்றும் மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரிச் சுமைகளை மக்கள் மீது திணித்துள்ள தி.மு.க அரசுக்கு கடும் கண்டனம்
தீய சக்தி தி.மு.க-வுடன் ரகசிய உறவு வைத்துக்கொண்டு கழகத்திற்கு துரோகம் இழைத்து வருபவர்களுக்கு, கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஒன்றிணைந்து, தக்க பாடம் புகட்டிட, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சூளுரை
அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்ட கழக ஆட்சியின் போது, மக்கள் நலன் கருதி செயல்படுத்தப்பட்ட நடந்தாய் வாழி காவேரி திட்டம் மற்றும் காவேரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த, மத்திய அரசுக்கு அழுத்தம் தர, தி.மு.க அரசை வலியுறுத்தல்
சட்டமன்ற மரபுகளை, ஜனநாயக மாண்புகளை சீரழிக்கும் தி.மு.க அரசிற்கு வன்மையான கண்டனங்கள்
இளம் தலைமுறையினரை சீரழிக்கும் நோக்கில், தமிழ் நாட்டில் பெருகிவரும் போதை கலாச்சாரத்தை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துவரும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனம்
வரவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும்; அதற்கடுத்து வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும், கழகப் பொதுச் செயலாளர் தலைமையில் தீவிர களப்பணி ஆற்றி, கழகத்தின் வெற்றிக் கொடி பட்டொளி வீசிப் பறந்திட வீரசபதம் ஏற்போம்
மேற்கண்ட தீர்மானங்கள் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil