scorecardresearch

அண்ணாமலையை அருகில் வைத்துக் கொண்டு அ.தி.மு.க தலைவர்களை சந்தித்த அமித்ஷா: பேசியது என்ன?

அ.தி.மு.க பொதுச் செயலாளரான பின் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார்.

EPS meets Amit Shah
EPS meets Amit Shah

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த தலைவர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் நேற்று (ஏப்ரல் 26) சந்தித்துப் பேசினார். அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றப் பின் முதல் முறையாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது அமித்ஷாவுடன் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உடனிருந்தார்.

தமிழகத்தில் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியில் இருந்து வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல்களில் கூட்டணியில் நின்று போட்டியிட்டனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இருவரும் தனித்துப் போட்டியிட்டனர். அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒன்றைய தலைமை பிரச்சனை வெடித்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இது சிக்கலை ஏற்படுத்தியது. அதன் பின் நீதிமன்ற தீர்ப்பையடுத்து இ.பி.எஸ் அ.தி.மு.க பொதுச் செயலாளரானார்.

அதோடு திடீர் திருப்பமாக பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் கட்சியில் இருந்து வெளியேறி அ.தி.மு.கவில் இணைந்தனர். அவர்கள் அண்ணாமலையின் தலைமையை குற்றஞ்சாட்டினர். இந்த நேரத்தில் பா.ஜ.க- அ.தி,மு.கவிடையே சலசலப்பு ஏற்பட்டது. இருவரும் கருத்து மோதலில் ஈடுபட்டனர். கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனாலும் டெல்லி பா.ஜ.க தலைவர்களுக்கும் அ.தி.மு,கவுக்கும் சுமூக உறவு இருந்து வருகிறது.

அப்போது, மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் டெல்லி மூத்த தலைவர்கள் தமிழகத்தில் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி தொடர்கிறது என்று கூறினர், இந்நிலையில், டெல்லியில் நேற்று சந்திப்பு நடைபெற்றுள்ளது. அண்ணாமலையும் உடன் இருந்ததால் இந்த மோதல் குறித்து விவாதித்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் தமிழக பாஜக, அதிமுக இடையேயான பிணக்குகள் தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.

குறிப்பாக, நாம் பிரிந்து இருந்தால் எதிரிகளுக்கு வெற்றி எளிமையாகிவிடும் என எடப்பாடி பழனிச்சாமி அமித் ஷாவிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் விரிவாக ஆலோசித்துள்ளனர்.

இனி வரும் நாட்களில் கூட்டணியில் குழப்பம் இல்லாமல் செயல்பட வேண்டும் என விவாதித்ததாகவும் தெரிகிறது. ஒட்டு மொத்தத்தில் அ.தி.மு.க- பா.ஜ.க இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக தொடங்கியுள்ளதை இந்த சந்திப்பு உறுதிப்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பின் போது, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஏற்பட்ட தொகுதி பங்கீட்டு குழப்பங்களை தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே தொகுதிகளை முடிவு செய்தால், தேர்தல் பணிகளை தொடங்க ஏதுவாக இருக்கும் என பா.ஜ.க கூறியதாகத் தெரிகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்டதாகவும் கூறப்படுகிறது. அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்த தகவல்களை, டெல்லியில் இன்று காலை செய்தியாளர்களை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி விரிவாக வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Eps meets amit shah annamalai joins the meeting