/indian-express-tamil/media/media_files/2025/07/16/seeman-2025-07-16-16-49-10.jpg)
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது, "பா.ஜ.க.வுடன் இணங்கிச் செல்வதற்காகவே எடப்பாடி பழனிசாமி அவ்வாறு பேசுகிறார்," என்று சீமான் கூறினார். தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் செல்வதற்காக கடந்த 2018-ல் திருச்சிக்கு வருகை தந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் ஒரே விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்தனர்.
திருச்சி விமான நிலையம் வந்த மதிமுக பொதுச்செயலாளரை வரவேற்க மதிமுக தொண்டர்களும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை வரவேற்க அக்கட்சி தொண்டர்களும் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். விமானத்தில் இருந்து இறங்கி வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து விட்டு தஞ்சைக்கு பயணமாகினார்.
அப்போது மதிமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே கடும் பரஸ்பர மோதல் நடைபெற்றது. சீமான் விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்பே நடந்த மோதலால் விமான நிலையம் போர்க்கலமாக காட்சியளித்தது. இதுதொடர்பாக மதிமுகவினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது அன்று கொடுத்த புகார் தொடர்பான வழக்கு விசாரணை இன்று திருச்சி மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி கோபிநாத் முன்னிலையில் நடந்த விசாரணையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கிற்கு வரும் 19ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என தெரிவித்தார். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு எதற்காக ஓரணியில் திரள வேண்டும் ஹிந்தி திணிப்பை எதிர்க்கவா? வடவர் ஆதிக்கத்தை தடுக்கவா? திராவிட கட்சிகள் செய்த அரசியலை மட்டும் தான் செய்யும் சேவை அரசியலோ செயல் அரசியலையோ செய்யாது அது அதற்கு தெரியாது.
விவசாயிகள் ஆசிரியர்கள் ரோட்டில் வந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், திமுகவினர் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வதாக கூறுகிறார்கள். திமுக ஆட்சியில் சமூக நீதி, கட்டிடத்தில் மட்டும் தான் இருக்கிறது. திராவிட கட்சிகளுக்கு சேவை அரசியல் செய்ய தெரியாது. விவசாயிகளும் ஆசிரியர்களும் ரோட்டில் வந்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில் திமுக ஆட்சியாளர்கள் வீடு வீடாக செல்வதாக கூறுகிறார்கள். இந்து பாசிச பாஜக அரசின் கொள்கைகளில் திமுக அரசு எந்த விதத்தில் மாறுபடவில்லை.
டி.என்.பி.எஸ்.சி தேர்வில் அரசியல் கேள்விகள் கேட்கக்கூடாது என அதன் தலைவர் கூறுகிறார். ஆனால் விடியல் பயணம் எப்போது தொடங்கப்பட்டது என கேட்கப்பட்ட கேள்வி அரசியல் கேள்வியா? இல்லையா?திமுக ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் பரப்புரை செய்து வாக்கு சேகரிப்பிலும் ஈடுபடுகிறார்கள்.
இந்திய ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சியில் பங்குபெறும் திமுக, மாநிலத்தில் அவருடைய கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவதில்லை. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் தன்னாட்சி என கூறியவர்கள், தற்பொழுது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் குடும்ப ஆட்சி என்கிற நிலையில் இருக்கிறார்கள். ஒரு கோடி நபர்களை உறுப்பினர்களாக இணைத்துள்ளதாக கூறும் திமுக வாக்குக்கு காசு கொடுக்காமல் இருக்குமா? பசு பாதுகாப்பு என பாஜக கூறுவதும், மாடுகளை பாதுகாக்கிறேன் என நீங்கள் கூறுவதும் ஒன்றாக இருப்பதாக விமர்சனம் வைக்கப்படுகிறதே என்கிற கேள்விக்கு விமர்சனம் வைப்பவர்கள் பால் தயிர் சாப்பிட மாட்டார்களா என சீமான் கேள்வி எழுப்பினார்.
பெரியார் மீது எனக்கு எந்த பற்றும் கிடையாது. பெரியார் திருக்குறளை இழிவாக பேசியுள்ளார் அதற்கு ஆதாரம் இருக்கிறது. தனி ஈழம், விடுதலை புலிகள் ஆதரவு, உலக தமிழர்கள் நலன் ஆகியவற்றுக்காக பேசுவதை குறைத்துக் கொண்டது ஏன் ? என்ற கேள்விக்கு...அதை பேசினால், அதையே... பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என சொல்கிறீர்கள். நான் மட்டும்தான் அதை பேசிக் கொண்டிருக்கிறேன் என்று பதிலளித்தார்.
திராவிட கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்க கூடிய நிலையில் தான் இருக்கிறார்கள். 2026 க்கு பிறகும் பா.ஜ.க இரண்டாடுகள் மத்தியில் ஆட்சியில் இருக்கும் என்பதால் பாஜகவுடன் இணங்கி செல்ல வேண்டும் என்பதற்காக பாஜக கருத்துக்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். பயத்தின் காரணமாக அப்படி பேசுகிறாரா என்கிற கேள்விக்கு அதீத துணிச்சல் காரணமாக அவ்வாறு பேசுகிறார் என கிண்டலாக பதிலளித்தார்.
2026 இல் அதிமுக ஆட்சிக்கு வரும் என எடுத்துக் கொள்ளலாமா என்கிற கேள்விக்கு, நான் அப்படி கூறவில்லை என்னுடைய பேச்சுக்கு நீங்கள் பொழிப்புரை எழுத வேண்டாம். மறைந்த காமராஜர், தமிழ்நாட்டை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டுமென கலைஞர் கருணாநிதியிடம் சொன்னதாக, மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா சமிபத்தில் பேசியுள்ளார். இது பற்றிய உங்களுடைய கருத்து என்ன? என்ற கேள்விக்கு, காமராஜர் உயிருடன் இல்லையே அவர் என்றைக்கு அவ்வாறு சொன்னார்? என சீமான் பதில் கேள்வி எழுப்பினார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.