ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு அ.தி.மு.க இ.பி.எஸ் தரப்புக்கு 2 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பா.ம.க தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பால் மரணமடைந்ததை அடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், அந்தத் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்குபதிவு பிப்ரவரி 27 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள்: ஈரோடு கிழக்கில் எனது இளைய மகனுக்கு சீட் கேட்டு இருக்கிறேன்’: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி
இந்தநிலையில், தி.மு.க கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த முறை அ.தி.மு.க கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், இந்த முறை அ.தி.மு.க.,வே நேரடியாக களமிறங்குகிறது. இ.பி,.எஸ் தரப்பில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் ஓ.பி.எஸ்.,ஸூம் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளார். ஆனால், பா.ஜ.க போட்டியிட்டால் நாங்கள் விட்டுத் தருவோம் என்று ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.
இதற்கிடையில், அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவது முக்கியம் என ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதேபோல் ஜெகன்மூர்த்தியின் புதிய பாரதம் கட்சியும் இ.பி.எஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஆனால் கடந்த முறை கூட்டணியில் இருந்த பெரிய கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து, யாருக்கும் ஆதரவு இல்லை என தெரிவித்துள்ளது.
அதேநேரம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுபவர்களுக்கு தனது ஆதரவை அளிப்பதாக அறிவித்துள்ளது.
மறுபுறம் பா.ஜ.க தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. இ.பி.எஸ் தரப்பு நிர்வாகிகள் முனுசாமி, செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோர் இன்று கமலாலயம் சென்று அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர். இதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் அண்ணாமலையை தனியாக சந்தித்து பேசியுள்ளார்.
இந்தநிலையில், பா.ஜ.க இதுவரை தனது முடிவை அறிவிக்கவில்லை. இடைத்தேர்தல் அறிவிப்பு வந்த உடனே தேர்தல் பணிக்குழுவை பா.ஜ.க அமைத்துள்ளதால், பா.ஜ.க போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பா.ஜ.க போட்டியிட்டால் ஆதரவளிப்பதாக ஓ.பி.எஸ்ஸூம் தெரிவித்துள்ளார். அதேநேரம், இ.பி.எஸ் அணியினர் பா.ஜ.க.,விடம் ஆதரவு கோரியுள்ளதால், பா.ஜ.க என்ன முடிவெடுக்க போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil