ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நல குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தலை அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, த.வெ.க உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
இதனால் தி.மு.க. - நாம் தமிழர் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தி.மு.க. சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். தி.மு.க. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலுக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்தை தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். அதைபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் ஓட்டு வேட்டையாடி வருகிறார்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலையொட்டி அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் பொதுக்கூட்டம் நடத்தியதாக சீமான் மீது பறக்கும் படை அதிகாரி நவீன் அளித்த புகாரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே தேர்தல் விதிகளை மீறியதாக சீமான் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.